Ad

புதன், 18 நவம்பர், 2020

‘டோட்டல் சரண்டர்’ சிதம்பரம்... சொதப்பிய தினகரனின் ஸ்கெட்ச்! கழுகார் அப்டேட்ஸ்

`தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் பீகார் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கொடுக்கும் சீட்களை வாங்கிக்கொள்ளும் மனநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்கள்’ என்று சமீபத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா... அது தொடர்பான காட்சிகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், ``சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளுக்காக தி.மு.க-விடம் சீட் பேரம் பேச மாட்டோம். ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு காங்கிரஸ் பணியாற்றும்’’ என்று தி.மு.க கரைவேட்டி கட்டாத குறையாக ஒரேடியாக மனிதர் சரண்டர் ஆகியிருக்கிறார்.

பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான நவம்பர் 10-ம் தேதி, டெல்லியிலுள்ள கட்சி சீனியர்களிடம் பேசிய ப.சிதம்பரம் தரப்பினர், ``காங்கிரஸ் கட்சியை தி.மு.க கழற்றிவிடுவதாக சிறு பேச்சு எழுந்தாலும், அரசியல் செய்து கூட்டணியைக் கலைப்பதற்கு பா.ஜ.க தயாராக இருக்கிறது. தி.முக-வை விட்டால் நமக்கு வழியில்லை; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்களாம். அதன் பிறகுதான், இந்த முடிவாம்.

அப்புச்சி... கதறவைக்கும் கதர் வரலாற்றில், இன்று முதல் நீங்கள் `வெள்ளைக்கொடி வேந்தன்’ என்றே போற்றப்படுவீர்கள்!

தி.மு.க தரப்பில், தங்களுக்குச் சாதகமான தொகுதிகள் எவை, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்கலாம் என்று தமிழகம் முழுக்க சர்வே ஒன்றை நடத்திவருகிறார்கள். மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 193 தொகுதிகளை தி.மு.க அணிக்குச் சாதகமான தொகுதிகளாகக் குறித்துக் கொடுத்திருக்கிறதாம் ஐபேக் நிறுவனம். ஆனால், கட்சியின் சீனியர்களோ... ``முழுசா விசாரிக்காம... வெறும் டேபிள் வொர்க் செஞ்சு லிஸ்ட்டை ரெடி பண்ணியிருக்காங்க. அவங்க கொடுத்திருக்கிற தொகுதிகள்ல 30 தொகுதிகள்ல பா.ம.க-வுக்கு சாதகமான வன்னியர் ஓட்டுகள் அதிகம் இருக்கு.

அறிவாலயம்

அங்கெல்லாம் கடந்த சட்டமன்றத் தேர்தல்ல ஆயிரம், ரெண்டாயிரம் ஓட்டு வித்தியாசத்துலதான் தோத்தோம். இதுதவிர, கிட்டத்தட்ட 40 தொகுதிகள்ல கட்சியில கோஷ்டிப் பிரச்னை உச்சத்துல இருக்கு. அங்கெல்லாம் உள்ளடி வேலைகள் நடக்குறதுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கு. அதையெல்லாம் குறிப்பிடாம, ஏனோ தானோனு லிஸ்ட் ரெடி பண்ணியிருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இதுக்கும் தனி பில் போட்டுட்டாங்க” என்று புலம்புகிறார்கள். இங்கே இப்படியென்றால், இன்னொரு பக்கம் இந்தத் தொகுதிகள் லிஸ்ட்டை ஸ்மெல் செய்த அ.தி.மு.க தரப்பு, தனது ஐ.டி டீம் மூலமாக அங்கெல்லாம் குழப்பங்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறதாம்.

பேசாம கிளி ஜோசியக்காரனைக் கூப்பிட்டு சீட்டு எடுக்கச் சொன்னா, பத்து ரூபாயில முடிஞ்சிடும் விஷயம்!

நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்புவகித்தவர் பாஸ்கர பாண்டியன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.ஏ.எஸ்-ஆக பதவி உயர்வு பெற்றவர், சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு மனுக்கள் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிவந்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியரான இன்னசென்ட் திவ்யா பணிமாறுதல் செய்யப்பட்டு, அந்த இடத்துக்கு பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்படுவார் என்று சமீபத்தில் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இன்னசென்ட் திவ்யா மாற்றப்படவில்லை. மாறாக, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு மாற்றப்பட்டார் பாஸ்கர பாண்டியன்.

அதுமட்டுமல்ல... அறிவிப்பு வெளியான மறுநாளே முதல்வரின் ஊட்டி விழா ஏற்பாட்டை முன்னின்று கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் பாஸ்கர பாண்டியனிடமே ஒப்படைக்கப்பட்டதுதான் இந்த விவகாரத்தில் ட்விஸ்ட். ‘‘வந்தா ஊட்டிக்கு கலெக்டராதான் வருவேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருந்தேன்... கடைசியில சி.எம் புரோகிராமை அரேஞ்ச் பண்ணவெச்சிட்டாங்க’’ என்று பழைய சகாக்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டாராம் மனிதர்.

மனுஷன் ரொம்ப இன்னசென்ட்டா இருக்கிறாரே!

கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், சமீபத்தில் உயரதிகாரி ஒருவர் மாற்றப்பட்டார். அவர் புதிய பணிக்கும் உடனடியாகச் செல்லாமல், அரசு கொடுத்த வீட்டையும் காலி செய்யாமல் இருந்திருக்கிறார். இதனால், புதிதாகப் பொறுப்பேற்ற அதிகாரியால், அந்த அரசு வீட்டில் குடியேற முடியவில்லை. பொறுத்துப் பார்த்த அந்தப் புதிய அதிகாரி, தன் மனைவி மற்றும் சில அலுவலர்களுடன் பழைய அதிகாரி குடியிருக்கும் அரசு வீட்டுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார்.

Also Read: உதயநிதியின் தீபாவளிப் பட்டாசு முதல் டிஜிபி அலுவலகத்தின் வெடிச் சத்தம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

அப்போது, பழைய அதிகாரியின் மனைவி, ``தகவல் சொல்லிட்டு வர மாட்டீங்களா?’’ என்று எகிறிவிட்டாராம். புதியவருடன் துணைக்குச் சென்ற சிலரை போனில் அழைத்த பழைய அதிகாரி, ``நான் திரும்பி வர மாட்டேன்னு நினைச்சுட்டீங்களா... சீக்கிரமே அதே இடத்துக்கு வருவேன். அப்புறம் உங்களைப் பார்த்துக்கறேன்’’ என்று மிரட்டல் தொனியில் எச்சரித்தாராம். இதைக் கேட்டு அந்த அரசு அலுவலர்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள்.

`கமிஷன்’ கறையால் தூக்கியடிக்கப்பட்டவர், வீட்டை காலிபண்ணவும் ‘கமிஷன்’ கேட்பார்போல!

வட மாவட்டத் தொகுதி ஒன்றின் முன்னாள் எம்.எல்.ஏ அவர். `மாமரத்து வண்டாக’ அவர் இருந்தபோது, அந்தக் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், தோட்டத்தில் `கவனிக்கப்பட்டு’ கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். `கதிரவன்’ கட்சி பக்கம் தாவியவர் அங்கும் `முடி’யிடம் மோதினார்; போதாததற்கு ஏடாகூட விவகாரத்திலும் சிக்கினார். இதனால், அங்கிருந்தும் கட்டம் கட்டப்பட்டு ஒதுங்கினார். சமீபத்தில் `மலர்’ கட்சியில் சேர்ந்திருப்பவர், மலர் தேடும் வண்டாக வலம்வருகிறாராம்.

இவரால் மாவட்ட அளவில் பொறுப்பு கொடுத்து அமரவைக்கப்பட்டிருக்கும் பெண்மணியுடன் அடிக்கடி விடிய விடிய டிஸ்கஷன் நடக்கிறதாம். விஷயம், தூர தேசத்திலிருக்கும் பெண்மணியின் கணவருக்குத் தெரியவர, உள்ளூர் கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு அழுது புலம்பியிருக்கிறார். விவகாரம் பெரிதானதால், கணவரைத் தொடர்புகொண்ட `வண்டு’ பிரமுகர், ``ஆட்சியே எங்களோடதுதான். இதுக்கு மேல பேசினா நாடு திரும்ப மாட்டே...’’ என்று மிரட்டினாராம். புகார் டெல்லி வரை செல்ல... கையில் ஹைவோல்டேஜ் கொசு பேட்டுடன் காத்திருக்கிறதாம் கட்சித் தலைமை.

கட்சிக்குக் கட்சி மனுஷன் இதே வேலையாத்தான் திரிஞ்சிருப்பாரோ!

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க-விலுள்ள `ஜி’ நிர்வாகி ஒருவருக்கு எதிராக அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே பாலியல் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். முகம் தெரியாதபடி ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருக்கிற ஆபாசப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் கசியவிட்டிருக்கும் எதிராளிகள், பெண்மீது படுத்து உருளும் ஆண் கையிலுள்ள கடிகாரத்தைக் காட்டி, ``ஜி-தான் அது. எப்படி உருள்றாரு பாருங்க’’ என்று கோத்துவிட்டிருக்கிறார்கள். ``அந்தப் புகைப்படத்தில் இருப்பது ஜி பிரமுகர் இல்லை’’ என்கிறது தி.மு.க வட்டாரம். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வேண்டப்பட்டவரான ஜி நிர்வாகி, தனக்கு எதிராக ஆபாச வலைப்பின்னலைப் பின்னியிருக்கும் ஆட்களைக் களையெடுக்க துரைமுருகனிடம் லிஸ்ட் கொடுத்திருப்பதால், மாவட்ட அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

`வாட்ச்’-ஐ வெச்சு வாட்ச் பண்ணிட்டாங்கன்னு சொல்லுங்க ஜி!

வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே பாலகங்கா சிக்கலில் சிக்கியிருப்பதுதான் சென்னை அ.தி.மு.க-வில் பரபர டாக். இவரின் மாவட்டத்துக்குள் வரும் தெற்குப் பகுதி இணைச் செயலாளரான பெண் நிர்வாகி செல்லம்மாளுக்கும், பகுதிச் செயலாளர் வி.பி.எஸ்.மதனுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்திருக்கிறது. செல்லம்மாளைப் பற்றி மதனும், முன்னாள் பகுதிச் செயலாளர் ஆவின் அருள்வேலும் ஏகவசனத்தில் பேசிவந்ததாகப் புகார். நவம்பர் 5-ம் தேதி இந்த விவகாரம் மாவட்டச் செயலாளர் பாலகங்கா முன்னர் பஞ்சாயத்துக்குச் சென்றபோது, செல்லம்மாளைக் கீழே தள்ளி, வயிற்றிலும் நெஞ்சிலும் மிதித்தாராம் மதன்.

பாலகங்கா

பதறிப்போன பாலகங்கா, ``எவனாவது வீடியோ எடுத்துடப் போறான்ய்யா. உங்க சண்டையை வெளியிலவெச்சுக்கோங்க’’ என்று இரு தரப்பையும் வெளியே அனுப்பியிருக்கிறார். இந்த விஷயம், உளவுத்துறை மூலமாக கட்சி மேலிடத்துக்குச் சென்றிருக்கிறது. பாலகங்காவைத் தொடர்புகொண்டு எச்சரித்த கட்சி மேலிடம், மதன் மீது செல்லம்மாள் கொடுத்த போலீஸ் புகாரைப் பேசித் தீர்க்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது. இப்போது யானைக்கவுனி காவல் நிலைய அதிகாரி ஒருவர் மூலமாக செல்லம்மாளிடம் சமாதானப் படலம் நடக்கிறதாம். இவங்கதான் நாட்டுல பெண்களைப் பாதுகாக்க போறாங்களாம்...

`அம்மா’ இருந்திருந்தா ட்ரீட்மென்ட்டே வேற மாதிரி இருந்திருக்கும்!

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரைக்குப் பயன்படுத்தும் வாகனம், சென்னையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகருக்குச் சொந்தமானது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இந்த வாகனத்துக்குத் தற்காலிக ஆவணங்கள் மட்டுமே இருப்பதாகச் சொன்ன காவல்துறை அதிகாரிகள், ``வாகனத்துக்கு நிரந்தர பர்மிட், சாலை வரி கட்டிய ரசீதைக் காட்டினால்தான் அனுமதிப்போம். இல்லாவிட்டால், வாகனத்தைப் பறிமுதல் செய்வோம்’’ என்று கூறியிருக்கின்றனர்.

இதையடுத்து வாகனத்தை மாற்றும் முடிவுக்கு முருகன் தரப்பு வந்துவிட்டதாம். யாராவது, `பழைய வாகனம் எங்கே?’ என்று கேட்டால், ``வண்டியில் டெக்னிக்கல் பிரச்னை’’ என்று சொல்லச் சொல்லியிருக்கிறார்கள்.

நீங்க சொன்னதை அப்படியே சொல்லிட்டோம்ங்க, சரியா!

அமித் ஷாவின் வலது கரமும், பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளருமான பூபேந்தர் யாதவ் மூலமாக, அமித் ஷாவை அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்ததாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல் ஓடியது. `தனி விமானம் கொடுத்து, டெல்லிக்கு அழைத்து வந்தார்கள்... தினகரன் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டார்கள்’ என்றெல்லாம் அப்போது பில்டப் கொடுத்தார்கள்.

டி.டி.வி தினகரன்

ஆனால், தினகரன் நினைத்த காரியம் எதுவும் கைகூடவில்லையாம். இந்தநிலையில், அதே பூபேந்தர் யாதவ் மூலம் மீண்டும் சென்னையில் அமித் ஷாவைச் சந்திக்க முயன்றுவருகிறதாம் தினகரன் தரப்பு. ஏற்கெனவே, தமிழக தேர்தல் பொறுப்பாளராக பூபேந்தர் யாதவ் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு இருந்தது. ஆனால், தேசிய பொதுச்செயலாளரான சி.டி.ரவியை தமிழகத்துக்கு பொறுப்பாளராக நியமித்துவிட்டது டெல்லி. இதில் அப்செட்டான பூபேந்தர் யாதவ், தினகரன் தரப்பு காய்நகர்த்தலை டெல்லிக்குத் தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.

ஓவர் பில்டப் உடம்புக்காவாது... தெரிஞ்சா சரி!



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-ttv-sketch-and-other-recent-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக