Ad

புதன், 11 நவம்பர், 2020

நெல்லை: கஞ்சா போதை.. ஆபாசப் படம்.. பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்கு முன்பாக நாகர்கோவிலில் காசி என்ற பொறியியல் பட்டதாரி, இளம் பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் வெளியானது.

முக்கூடல் காவல் நிலையம்

நெல்லை மாவட்டத்திலும் மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. முக்கூடல் அருகே உள்ள கண்டப்பட்டி என்ற கிராமத்தில் இளம் பெண்களைக் குறிவைத்துச் செயல்பட்ட அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவனைக் கைது செய்த போலீஸார் இரு இளைஞர்களைத் தேடி வருகிறார்கள்.

முக்கூடல் கண்டபட்டியைச் சேர்ந்தவர் சாலோமோன். 25 வயது நிரம்பிய கட்டடத் தொழிலாளியான அவரும் ஜான்சன் (24) மனோ சேட்(27) ஆகியோரும் நண்பர்கள். மூவருமே சரிவர வேலைக்குச் செல்லாமல் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸார் தேடி வரும் சாலமோன்

எப்போதும் போதையில் சுற்றித் திரிந்த மூவரும் ஊருக்குள் இருக்கும் இளம் பெண்களைக் குறிவைத்து பழகி அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலோமோனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

சாலோமோனின் குணம் தெரியாத அந்த இளம் பெண், அவரை உண்மையாக நேசித்துப் பழகியிருக்கிறார். அவரையே திருமணம் செய்யும் முடிவில் இருந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல சாலோமோன் படம் பிடித்துள்ளார்.

Also Read: பிரபலங்கள் வீட்டுப் பெண்களுக்கு பாலியல் மிரட்டல்... இது என்ன உளவியல்?

அதன் பின்னர் அந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் பேசி ஆபாசமாகப் படம் பிடித்திருக்கிறார். கொஞ்ச நாளிலேயே அவருடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அந்த ஆபாசப் படங்களை வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதனிடையே, சாலமோனுடன் அந்தப் பெண்ணுக்குத் தொடர்பு இருக்கும் விவரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததால், அந்த பெண்ணுக்கு பெற்றோர் அவசரமாக வேறொருவருடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர் . அதனால் சாலமோன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

representational image

ஆனாலும் விடாமல் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு மிரட்டிய சாலமோன், அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கியிருக்கிறார். பிரச்னை முடிந்துவிடும் என நம்பிய அந்தப் பெண் தனது நகைகள் மற்றும் பணத்தைக் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு வக்கிரத்தை வெளிப்படுத்திய சாலமோன், அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு மேலும் நகைகளைக் கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்ததுடன், தனது நண்பர்களான ஜான்சன், மனோ சேட் ஆகியோருடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். சாலமோனின் நண்பர்களும் அந்தப் பெண்ணிடம் தாங்கள் சொல்லும் இடத்துக்கு வருமாறு மிரட்டியிருக்கிறார்கள்.

மனோ சேட்

அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், நடந்த விவரங்களை எல்லாம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர் உதவியுடன் சாலமோன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

தங்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும் கோபமடைந்த கஞ்சா கும்பலைச் சேர்ந்த சாலமோன், ஜான்சன், மனோ சேட் ஆகியோர் அந்தப் பெண்ணின் ஆபாசப்படங்களை அவரது கணவர் மற்றும் மாமனாரின் மொபைல் போனுக்கு அனுப்பி விட்டனர். அதைக் கண்டு அதிர்ந்த கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

இந்த நிலையில், சாலமோன், ஜான்சன், மனோ சேட் ஆகியோர் மீது முக்கூடல் போலீஸார் கொலை மிரட்டல், பாலியல் ரீதியாக பெண்களை மிரட்டுதல், நகை பறிப்பு, உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்கள்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஜான்சன் மீது ஏற்கெனவே ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததுடன் பணம் பறித்ததாக வழக்கு உள்ளது. அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற இருவரும் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

முக்கூடல் காவல் நிலையம்

மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான இந்த கும்பல், பெண்களைக் குறிவைத்துத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த விவரம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் சாலமோன், மனோ சேட் இருவரையும் பிடித்தால் மேலும் பல் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் தெரியவரும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/nellai-police-filed-a-case-against-a-gang-of-youths-for-sexual-harassment-to-a-girl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக