Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

நாள்பட்ட நோய்கள்; ஒருமாத சிகிச்சை! - கொள்ளையன் திருவாரூர் முருகன் உடல்நலக் குறைவால் மரணம்

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைக்கடையில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் முருகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

லலிதா ஜூவல்லரி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் மேற்கு சுவரைத் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Also Read: `நகைகளைப் புதைக்கும் ஸ்டைல்; ட்ரம் நிறைய பணம்!' -திருவாரூர் முருகன் மனைவி சொல்லும் சீக்ரெட்

இந்த சம்பவத்தில் திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கணேசன் ஆகியோர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இதேகும்பல் திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் திருடியது தெரியவரவே, திருச்சி தனிப்படை காவல்துறையினர் அவரை தீவிரமாகத் தேடினர். சுரேஷ், செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரூ நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

சிகிச்சையில் முருகன்

இவர்களிடமிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களுரூ, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்திருந்தனர்.

அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. வாய்பேச முடியாத நிலையில் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வந்த முருகன், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணி அளவில் இறந்து விட்டார்.

லலிதா ஜூவல்லரி முருகன்

இதனைத்தொடர்ந்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு முருகனின் உடல் அவரின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என பெங்களூர் போலீஸார் தகவல் தெரிவிக்கின்றனர். இறந்த முருகன் மீது சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும், ஆந்திராவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.



source https://www.vikatan.com/news/death/tiruvarur-murugan-passed-away-in-bengaluru-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக