வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்துள்ள சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் மோனிஷாவும் (19), பரதராமி பூஜாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் பூபாலன் (21) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்துவந்தனர். இருவரும் உறவினர்கள் என்றாலும் பெண் வீட்டார் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு காதலியை அவரது பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார் பூபாலன். இதனால், பெண் வீட்டார் கொதிப்பில் இருந்தனர். இந்த நிலையில், தங்களது மகள் காதல் கணவனுடன் மாமனார் வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்ட பெண் வீட்டார் அவரைப் பார்ப்பதற்காக சென்றனர்.
இவர்களுடன் உறவினர்கள் சிலரும் சென்றனர். இருத்தரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தை தகராறில் முடிந்தது. பெண் வீட்டார் வந்திருந்த இருசக்கர வாகனங்களை காதலன் தரப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர். பதிலுக்கு, பெண் வீட்டாரும் கொடூர தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், காதலன் தரப்பில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பரதராமி போலீஸார் வழக்குப்பதிந்து பெண்ணின் தந்தை பாபு, தாய் தனலட்சுமி, அண்ணன் கோபிநாத் உட்பட 9 பேரை கைதுசெய்தனர். இதேபோன்று காதலன் தரப்பில் அவரது பெற்றோர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதல் காரணமாக பதற்றம் நிலவுவதால், காதல் ஜோடிக்குத் தேவையான பாதுகாப்பையும் போலீஸார் வழங்கியிருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/social-affairs/crime/love-marriage-relatives-clash-in-gudiyatham-9-arrested-in-the-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக