Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

கோயில்களின் தெய்வீக திருமேனிகளை அலங்கரிக்கும் வெட்டிவேர்... எப்படி சாகுபடி செய்யப்படுகிறது?

மற்ற விவசாயம்போல வெட்டிவேர் விவசாயம் இல்லை. விதைகள், காய்கள், பூக்கள் எதுவும் கிடையாது. வெட்டி எடுக்கப்படும் வெட்டிவேர் தழைகளைக் கொண்டு, மீண்டும் பதியம் போட்டு சாகுபடி செய்ய வேண்டும். நல்ல மண் வளமும், நீர் வளமும் இருக்கும் இடங்களில் மட்டுமே இதைச் சாகுபடி செய்ய முடியும். அந்த வகையில் நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரக் கிராமங்களான தில்லைமங்கலம், சந்தைப்படுகை, மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், எடமணல் உள்ளிட்ட கிராமங்களில் தோட்டக்கலைப் பயிராக வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த குறு விவசாயிகள் வெட்டி வேர் சாகுபடியில் குடும்பத்தினரோடு ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர்.

வெட்டிவேர்

பரம்பரை பரம்பரையாக இந்தச் சாகுபடியை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

ஆதி காலங்களில் பெண்கள் இந்த வேரை விரும்பி தலையில் அணிவார்கள். இதனால் கூந்தல் மணம் பெறும். வெட்டிவேர் குளிர்ச்சி உண்டாக்கி; பித்தம் அடக்கி. பித்தத்தால் உண்டாகிற குருதி அழல் (BP), சர்க்கரை நோயால் ஏற்படுகிற நீர் வேட்கை, மயக்கம் மற்றும் நரம்பில் ஏற்படுகிற வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வெட்டிவேரை தைலமாகவும் தயாரித்து பயன்படுத்தலாம்.

வெட்டிவேர்

இந்த சாகுபடி குறித்து தில்லைமங்கலத்தைச் சேர்ந்த வெட்டிவேர் விவசாயி பன்னீர்செல்வத்திடம் பேசினோம்.

``பல தலைமுறைகளாக வெட்டிவேர் சாகுபடி செய்து வருகிறோம். வெட்டி வேர் தழையைப் பதியம் போட்டு நடவு செய்த 90 நாள்களில் அறுவடை செய்யலாம். நடவு செய்த நாள் முதல் தினமும் தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நடவு செய்த 20-ம் நாளில் கடலைப் புண்ணாக்கைத் தூளாக்கி உரமாக வைப்போம். மீண்டும் அதுபோல் 40-ம் நாளில் உரமிடுவோம். தழைகளில் பூச்சி தென்பட்டால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவோம். பெரும்பாலும் பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படாது. இத்தொழிலை அறிந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும். பெரும்பாலும் குனிந்தபடியே வேலை செய்ய வேண்டியிருப்பதால், இத்தொழிலைச் செய்பவர்களுக்கு இடுப்பு வலி தொந்தரவுகள் அதிகமாக ஏற்படும். தாத்தா, அப்பா இவர்களுக்குப் பிறகு இன்று நான் இத்தொழிலில் இருக்கிறேன். ஆனால், நாளை என் வாரிசுகள் இத்தொழிலைச் செய்வார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால், நாங்கள் படும் அவதியை அவர்கள் நேரில் கண்டு வருத்தப்படுகிறார்கள்.

வெட்டிவேர் சாகுபடி செய்யும் இடத்தைக் கோயில்கள் போன்ற தெய்வீக இடமாகக் கருத வேண்டும். கோயிலுக்குச் செல்வதைப் போலவே உடல் சுத்தமாக வெட்டிவேர் சாகுபடி செய்யும் இடத்துக்கு உரிமையாளர் முதல் தொழிலாளிகள் வரை வர வேண்டும்.

வெட்டிவேரை வாங்கிப் பல இடங்களுக்கு விற்பனைச் செய்வதற்கு ஒருவர் மட்டும் ஏஜென்ட் போல இருக்கிறார். நாங்களெல்லாம் நேரடியாகவே சென்னை, கேரளா, முக்கியமாக சிதம்பரம் போன்ற கோயில்களுக்கு விற்பனை செய்திடுவோம். வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு மற்றும் சித்த மருத்துவப் பொருள்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக வெட்டிவேர் திகழ்கிறது. மேலும் ஹெர்பல் பொருள்கள், ஊதுபத்தி தயாரிப்புக்கும் வெட்டிவேரை தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். 50 சென்ட் நிலத்தில் இதைச் சாகுபடி செய்ய ரூ.25,000 செலவாகும். அதே அளவு லாபமும் கிடைக்கும்.

வெட்டிவேர்

அழிந்து வரும் இந்த விவசாயத்தை நாங்கள் மட்டுமே செய்து வருகிறோம். இதைக் காப்பாற்ற அரசு தரப்பிலிருந்து எவ்வித உதவியும் செய்வதில்லை. குறிப்பாக, எங்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதில் எங்களுக்கு மிகவும் வருத்தம் உண்டு. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் அரசு அரிய வகை சாகுபடிச் செய்யும் எங்களுக்கும் வழங்கினால் என்ன? இப்போது அறுவடைக்காலம் கொரோனா ஊரடங்கால் அறுவடை செய்த வெட்டிவேரை விற்பனை செய்ய முடியாமல் நாங்களும் முடங்கி இருக்கிறோம். ஆனால், இது ஒரு தெய்வீகப் பொருள். இதை உற்பத்திச் செய்யும் பாக்கியத்தை ஆண்டவன் எங்களுக்கு அளித்திருக்கிறான். இதை என் இறுதி மூச்சு வரை செய்வேன்" என்றார்.

பின்குறிப்பு:

பொதுவாக வெட்டிவேர் என்றால், விலாமிச்சை என்று அழைக்கப்படும் புல் வகைக் குடும்பத்தைச் சேர்ந்த வெட்டிவேர் (Chrysopogon zizanioides) தான் பலருக்கும் தெரியும். ஆனால், இரண்டு வெட்டிவேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. வேரை வைத்துப் பார்த்தால் பெரிய வித்தியாசம் தெரியாது.



source https://www.vikatan.com/news/agriculture/story-on-vetiver-cultivation-and-its-challenges

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக