Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

ராமநாதபுரம் அதிர்ச்சி: குடும்பத் தகராறு - குழந்தைகளைக் குளத்தில் வீசிக் கொன்ற தாய்!

திருவாடானை அருகே பெற்ற தாயே தனது இரு குழந்தைகளை தாமரைக்குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி கணேசன். இவரது மனைவி சோனியாகாந்தி ( 27). இவர்களுக்கு நியா சந்தோஷிகா என்ற 3 வயது பெண் குழந்தையும், சாய் கிருஷ்த்திகேஷ் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். கணேசன் தம்பதியினர், பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நாச்சியந்தேல் கிராமத்தில், தனது வீட்டின் எதிரே உள்ள தாமரைகுளத்தில் குழந்தைகளை தாய் சுகன்யா முழ்கடித்து கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.

சோனியாகாந்தி

கணேசனின் பெற்றோர் குழந்தைகள் எங்கே என சுகன்யாவிடம் நேற்று கேட்டுள்ளனர். வீட்டிற்குள் படுத்திருப்பதாக சுகன்யா அவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது குழந்தைகளுக்கு பதில் தலையணையை குழந்தைகள் போல படுக்க வைத்து போர்வையால் மூடியிருப்பதை கண்டனர். மேலும், சுகன்யாவின் ஆடைகள் நீரில் நனைந்து ஈரமாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் எதிரில் உள்ள தாமரைக் குளத்தில் தேடிய போது குழந்தைகள், அதில் சடலமாக கிடந்துள்ளனர்.

Also Read: 25 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு; மாஜிஸ்திரேட் முன்னிலையில் கொலை செய்த பா.ஜ.க பிரமுகர்! - நடந்தது என்ன?

இதையடுத்து, திருவாடானை போலீஸாருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக நாச்சியேந்தல் கிராமத்துக்கு வந்த போலீஸார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தாமரை க்குளத்தில் கிடந்த குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய் சோனியாகாந்தியை கைது செய்த போலீஸார், குழந்தைகள் இறப்புக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக திருவாடானை போலீஸார் நடத்திய விசாரணையில், சோனியாகாந்தி தனது கணவர் கணேசனிடம் தனிக்குடித்தனம் செல்ல வலியுறுத்தி வந்த நிலையில், கணேசன் இதனை ஏற்கவில்லை. இதனால், ஆத்திரத்தில் தான் பெற்ற குழந்தைகள் எனக்கூட பாராமல் இரு குழந்தைகளையும் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், கடந்த சில நாள்களாக சோனியாகாந்தி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் திருவாடானை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/crime/ramanathapuram-police-arrests-mother-for-killing-her-daughter-and-son

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக