Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் வீட்டுப் பணிப்பெண்கள்... காப்பாற்றுமா அரசு?

கொரோனா வந்ததிலிருந்து இதுவரைக்கும், வீட்டு வேலைபார்க்கும் பெண்களில் 85 சதவிகிதத்தினர், தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள் என்கிறது ஆக்‌ஷன் எய்ட் அசோசியேஷன் என்னும் தன்னார்வ நிறுவனத்தின் ஆய்வு. தர்க்கரீதியாகப் பார்த்தால், இது கொரோனா பரவலைத் தடுக்கும் ஒரு முயற்சிதான். ஆனால், வீட்டு வேலைபார்க்கிற பெண்களின் வாழ்வாதாரத்தின் வேரையே அசைத்துப்போட்டிருக்கிறது. இந்தப் பெண்களின் தற்போதைய நிலைமையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் தலைவி எம்.வளர்மதியிடமும், வீட்டு வேலைகள் பார்த்து வந்த இரண்டு பெண்களிடமும் பேசினோம்.

தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் தலைவி எம். வளர்மதி

``கொரோனா பயத்தால் சமையல் வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு சுத்தமாக வேலை வாய்ப்பில்லை. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருக்கும் என்பதாலும், அவர்களுக்கு கொரோனா எளிதில் தொற்றும் என்ற பயத்தாலும், யாருமே வீட்டு வேலை தருவதில்லை.

சென்னைக்குள் இருந்த குடிசைவாசிகளையெல்லாம் காலி செய்ய வைத்து பெரும்பாக்கம், நாவலூர், படப்பை போன்ற இடங்களில் வீடு கட்டிக்கொடுத்திருக்கிறது அரசு. வீடு கட்டிக்கொடுத்தது நல்ல விஷயம்தான். ஆனால், வீட்டு வேலைபார்க்கும் பெண்களால் அவ்வளவு தூரத்திலிருந்து சென்னைக்கு வந்துபோக முடியவில்லை. அப்படியே ஒரு சிலர் வந்தாலும், வாங்குகிற சம்பளம் பேருந்துக் கட்டணத்துக்கே போய் விடுகிறது. இன்றைக்கு இருக்கிற விலைவாசியில் அவர்களால் நல்ல சாப்பாடுகூட சாப்பிட முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள்.

வீட்டு வேலைகள் பார்க்கும் பெண்கள் நகரத்துக்குள் இருந்தபோது, அருகருகே நான்கைந்து வீடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, மேல் வேலை என்று செய்துகொண்டிருந்தார்கள். அதனால், அவர்கள் குடும்பத்தை நடத்துவதற்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது பெரும்பாக்கம், படப்பை, நாவலூரிலிருந்து சென்னைக்குள் வருவதால், பயண நேரம் அதிகமாகிவிட்டது. அதனால், அவர்களால் முன்புபோல பல வீடுகளில் வேலைபார்க்க முடியவில்லை.

இந்த மக்களுக்கு பேண்டெமிக் ஆரம்பித்த முதல் இரண்டு மாதங்கள், அரசாங்கம் மாதம் 1,000 ரூபாய் தந்தது. இப்போது அதுவும் இல்லை. ஏழை மக்களுக்கு வயிறே இல்லை என்று நினைத்துவிட்டார்கள்போல. கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் இருப்பதுபோல, இவர்களுக்கும் ஒரு வழி ஏற்படுத்தித் தரும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல, வீட்டு வேலைபார்ப்பவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் குறைந்தது 5,000 ரூபாய் ஓய்வூதியம் கொடுத்தால் நன்றாக இருக்கும். வேலை பாதுகாப்பே இல்லாத நிலையில்தான் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `நாளையில இருந்து வேலைக்கு வராதீங்க' என்று ஓனர்கள் சொல்லிவிட்டால் இவர்கள் நிலைமை நிர்கதிதான். இவர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் வீட்டு வேலைபார்க்கும் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அரசு இந்த நேரத்திலாவது இவர்களைப் பற்றி யோசிக்க வேண்டும்'' என்று வருத்தத்துடன் சொல்கிறார் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் தலைவி எம்.வளர்மதி.

வீட்டு வேலைபார்த்து வருகிற ரேணுகாம்மாளிடம் பேசியபோது, ``நான் பெரும்பாக்கத்துல இருக்கேங்க. கொரோனா பிரச்னைக்கு முன்னாடி வரைக்கும் பக்கத்துல இருக்கிற அப்பார்ட்மென்ட்ல வீட்டு வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். லாக்டெளன் முடிஞ்சுதும் மறுபடியும் வேலை கேட்டுப் போயிருந்தப்போ `நாங்களே வீட்டு வேலையெல்லாம் பார்த்துக்கிறோம். நீங்க கொரோனா பிரச்னை முழுசா போனதுக்கப்புறம் வாங்க'ன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. ஏற்கெனவே வேலை பார்த்த வீடுகள்லேயே இப்படின்னா புது வீடுகள்ல வேலை தேடி போனா, `ஸ்லம் ஏரியாவுல மக்கள் நெருக்கமா வாழ்வீங்க. கொரோனா சீக்கிரம் பரவிடும். உங்களால எங்களுக்கும் வந்துடும்'னு பயப்படுறாங்க. கடந்த அஞ்சு மாசமா வேலையில்லாம இருக்கேன். வீட்டுக்காரரு ஓலா ஆட்டோ ஓட்டுறாரு. மக்கள் எல்லாரும் வேலைக்குப்போனாதான் அவருக்கும் பழையபடி வருமானம் கிடைக்கும்'' என்கிறார் சோகமாக.

ரேணுகாம்மாள்

அடுத்து பேசிய பரிமளா காந்தி, ``எங்களுக்கு வீட்டு வேலையைத்தவிர வேறெதுவும் தெரியாதுங்க. மார்ச் மாசத்துல இருந்து வீட்லதான் இருக்கேன். சின்னதா கடை போடலாம்னா, அதுக்கும் பணம் வேணும். இதுக்கு நடுவுல பிள்ளைங்களுக்கு ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் கேட்கிறாங்க. என்கிட்ட சாதாரண போன்தான் இருக்கு. மூணு வேளை சாப்பிடணும். பிள்ளைங்களை படிக்க வைக்கணும். எங்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவி செஞ்சா நல்லாயிருக்கும்'' என்கிறார் கண்ணீருடன்.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தப் பெண்களைக் காப்பாற்ற அரசு என்ன செய்யப்போகிறது..?



source https://www.vikatan.com/news/general-news/housemaids-lose-their-jobs-because-of-corona-and-suffer-now

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக