Ad

சனி, 17 அக்டோபர், 2020

சேதமான பென்னிகுவிக் கல்லறையை சீர்செய்தது யார்? உரிமை கொண்டாடும் அரசியல் கட்சிகள்... உண்மை என்ன?

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. இதை இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுவிக் என்பவர் கட்டினார். இதையடுத்து வறட்சியின் பிடியில் இருந்த தென்மாவட்ட மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக முல்லைப் பெரியாறு அணை மாறியது. குறிப்பாக, தேனி மாவட்டம் செழித்தது. தங்களுக்கு உதவிய, பென்னிகுவிக்கை நினைவுகூரும் விதமாக, அவரது பிறந்தநாளான ஜனவரி 14-ம் தேதி ஆண்டுதோறும் பொங்கல் வைத்து இம்மாவட்ட விவசாயிகள் வழிபடுவது வழக்கம்.

பென்னிகுவிக் கல்லறை; முன்பும் பின்பும்

அதுமட்டுமல்லாமல், வீட்டு விசேஷ அழைப்பிதழ்களில், பென்னிகுவிக்கின் படத்தை இடம்பெறச் செய்வதும், குழந்தைகளுக்கு பென்னி, பென்னிகுவிக், ஜான் பென்னி போன்ற பெயர்கள் வைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட தனது வீட்டில் ஒருவராக, கடவுளாக கர்னல் ஜான் பென்னிகுவிக்கைப் பார்க்கின்றனர் தேனி மக்கள்.

1913-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி லண்டனில் உள்ள தனது இல்லத்தில் மறைந்தார் பென்னிகுவிக். அவரது உடல், லண்டன் சர்ரே மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 100 வருடங்களைக் கடந்து, பராமரிக்கப்பட்டு வந்த பென்னிகுவிக்கின் கல்லறை, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி சேதமடைந்தது. இதை அறிந்த தேவாலய நிர்வாகம், லண்டன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தது. விசாரணையில், தொடர் மழை மற்றும் காற்று காரணமாகவே கல்லறை சேதமடைந்தது தெரியவந்தது. அதற்குள்ளாக, கல்லறையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகத் தமிழகத்துக்கு தகவல் பரவியது. இதனால் தேனி மாவட்டத்தில், பதற்றமான சூழல் உருவானது. அரசியல் கட்சிகள், இது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்தன.

முரசொலியில் வெளியான செய்தி

இச்சம்பவம் நடந்த சில வாரங்களில், தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் ஒரு செய்தி வெளியானது. அதில், ``தி.மு.க தலைவர் ஸ்டாலினின் ஆணையின் படி லண்டன் தி.மு.க சார்பாகத் தேவாலய உதவியுடன், கல்லறை சீரமைக்கப்பட்டது" எனப் படத்துடன் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, ``எம்.ஜி.ஆர் மக்கள் மன்றம், குரையடன் தமிழ்ச் சங்கம் சார்பில் தேவாலயத்தை இ-மெயில் மூலமாக அணுகி, கல்லறையை சீர்செய்ய அறிவுறுத்தினோம். அதன்படி கல்லறை சீர் செய்யப்பட்டுவிட்டது" எனவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சில தமிழகத்தைச் சேர்ந்த அமைப்புகளும் கல்லறையை சீர்செய்ய தங்களின் பங்களிப்பு முக்கியமானது என சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்தனர். உண்மையில், பென்னிகுவிக்கின் கல்லறையை சீர்செய்ய யார் காரணம் என்ற குழப்பம் உருவானது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கினோம்.

தேவாலய நிர்வாகத்தின் பேஸ்புக் பதிவு.

லண்டனில் வசிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நம்மிடையே பேசும்போது, ``என்னுடைய வீட்டின் அருகேதான் பென்னிகுவிக் கல்லறை இருக்கும் தேவாலயம் உள்ளது. கல்லறை சேதமடைந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. நேரில் சென்று பார்த்தேன். அப்போது தேவாலய நிர்வாகத்திடம் நான் பேசினேன். மழை மற்றும் காற்றினால்தான் சேதமடைந்ததாகவும், இது தொடர்பாக, பென்னிகுவிக்கின் உறவினர்களுக்கு தெரிவித்திருப்பதாகவும் தேவாலய நிர்வாகத்தினர் கூறினர். அதை அடுத்து சில தினங்களில் கல்லறையை சீர் செய்துவிட்டது தேவாலய நிர்வாகம். சீரமைக்க தேவையான தொகையை பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் கொடுத்ததாகத் தேவாலய நிர்வாகம் கூறியது. அதைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டார்கள். தான் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனத் தேவாலய நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார் அந்த நபர். மற்றபடி எந்த அரசியல் கட்சியும், அரசியல் சார்பு அமைப்புகளும் இதற்குக் காரணம் அல்ல. பென்னிகுவிக்கின் கல்லறை சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அதைச் செய்து முடித்த பெயர் வெளியிட விரும்பாத அந்த நபருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். மற்றபடி இதில் அரசியல் ஆதாயம் தேடுவது மிகவும் மோசமான செயல்” என்றார் காட்டத்துடன்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/who-repaired-the-cemetery-of-late-colonel-john-pennycuick

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக