Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

`ஒரே பொண்ணை இழந்துட்டோம்'; கதறும் விமானப் பணிப்பெண் குடும்பம் - திருமணமான 31-வது நாளில் சோகம்!

சென்னை மீனம்பாக்கம் ஏர்-இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் சரண்குமார் (30). இவர், கப்பல் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அன்பரசிக்கும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருமணம் நடந்தது. அன்பரசி, விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கிய நிலையில் சரண்குமார், சாப்பாடு வாங்க ஹோட்டலுக்குச் சென்றார். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார் அன்பரசி. சாப்பாடு பார்சலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த சரண்குமார், கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

தற்கொலை

நீண்ட நேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது தூக்கில் அன்பரசி தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து சரண்குமார் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். அன்பரசியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அன்பரசியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்பரசியின் மரணம் குறித்து சரண்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது சில தினங்களுக்கு முன் தனக்கும் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. அதனால் சம்பவத்தன்று அன்பரசி வீட்டில் சமைக்கவில்லை. அதனால் ஹோட்டலுக்குச் சென்று சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். அதற்குள் அன்பரசி, தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். அதன்அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி 32 நாள்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

அன்பரசி

Also Read: சென்னை ஐ.ஐ.டியில் கேரள மாணவி தற்கொலை... செல்போன் பதிவால் பேராசிரியர்களுக்கு சிக்கல்!

அன்பரசி, தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை. அதனால் அவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதில் தற்கொலை தொடர்பாக ஏதாவது தகவல் இருக்கிறதா என போலீஸார் தேடிவருகின்றனர். இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என மீனம்பாக்கம் போலீஸார் தெரிவித்தனர். மேலும், அன்பரசி தற்கொலை செய்துகொண்ட அறையிலிருந்தும் எந்தவிதக் கடிதமும் கிடைக்கவில்லை என போலீஸார் கூறுகின்றனர். அதனால், விமானப் பணிப்பெண் அன்பரசியின் மரணத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறை முன் அன்பரசியின் குடும்பத்தினரும் சரண்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரும் சோகத்தோடு காத்திருந்தனர். அவர்களிடம் அன்பரசிக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, அவர்களிடமிருந்து கண்ணீரே பதிலாக வந்தது. சிறிது நேரத்துக்குப்பிறகு அன்பரசியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ``மாப்பிள்ளை சரண்குமார், தங்கமான பையன். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறான். அன்பரசியிடம் அன்பாக இருப்பார். இரண்டு பேரும் நல்ல வேலையில் இருந்தார்கள். அதனால் எந்தப் பிரச்னையும் கிடையாது. அன்பரசி, சில நேரங்களில் கோபப்படுவாள். அதுதான் அவளின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகமாக இருக்கிறது" என்றார்.

தற்கொலை

அடுத்து அன்பரசியின் உறவுக்கார பெண் ஒருவர்,``எங்க சொந்த ஊரு சேலம். பெங்களூருவில் அன்பரசி படிச்சா. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்ல சில வருஷம் வேலைபார்த்தா. பிறகுதான் விமானப்பணி பெண்ணாக வேலைக்குச் சேர்ந்து மாதம் 70,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வந்தாள். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தோம். இப்போ ஒரே பொண்ணை இழந்து தவிச்சிட்டிருக்கோம்" என்றார் கண்ணீர் மல்க.



source https://www.vikatan.com/news/crime/chennai-air-hostess-commits-suicide-suspected-family-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக