Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

சென்னை: 2 ஏடிஎம் இயந்திரங்களுடன் மல்லுக்கட்டிய கொத்தனார் - லாக்கரை உடைக்க முடியாததால் தப்பிய பணம்!

சென்னை ஆவடி, பழைய திருவள்ளூர் சாலை ரயிவ்வே கேட் அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 10-ம் தேதி லுங்கி அணிந்தப்படி இளைஞர் ஒருவர் ஏடிஎம் மையத்துக்குள் சென்றார். கையில் வைத்திருந்த கத்தி மூலம் முதலில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியவில்லை. அதனால், அடுத்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தார். அதிலும் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியவில்லை. அதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார்.

ஹரிகிருஷ்ணன்

மறுநாள் காலை பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்கு சென்றவர்கள், இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வங்கியின் கிளைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பணம் கொள்ளைப் போகவில்லை எனத் தெரிந்ததும் நிம்மதியடைந்தனர். பின்னர் ஏடிஎம் கொள்ளை முயற்சி தொடர்பாக வங்கி கிளை மேலாளர் காயத்ரி, ஆவடி ரயில்வே போலீஸாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ஏடிஎம் இயந்திரங்களை இளைஞர் ஒருவர் உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ரயில்வே போலீஸ் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தானகிருஷ்ணன், காவலர் சுதாகர் ஆகியோர் சிசிடிவியில் பதிவான இளைஞரின் போட்டோவை காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்தனர். ஆனால், அவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இளைஞரின் போட்டோவுடன் ஒவ்வொரு இடமாக போலீஸார் தேடி வந்தனர்.

ஏடிஎம்

இந்தச் சமயத்தில் சிசிடிவியைக் காட்சிகளைப் பார்த்த போலீஸாருக்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைக்கும் இளைஞர் போதையிலிருப்பது தெரியவந்தது. உடனே, அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இளைஞரின் போட்டோவைக் காண்பித்து போலீஸார் விசாரித்தனர். அதிலும் குறிப்பிடும் வகையில் தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் சோர்ந்து போகாத ஸ்பெஷல் டீம் போலீஸார், ஆவடி பஸ் நிலைய பகுதியில் இரவு நேரத்தில் இளைஞரைத் தேடினர். அப்போது சிசிடிவியில் பதிவான இளைஞரின் முகமும் அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒருவரின் முகமும் ஒத்துப்போனது. உடனடியாக எஸ்.ஐ சந்தானகிருஷ்ணன், அந்த இளைஞரிடம் விசாரித்தார்.

Also Read: `3 ஆண்டுகளாக மாற்றப்படாத பாஸ்வேர்டு; இஎம்ஐ நெருக்கடி!’- ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்கிய வங்கி ஊழியர்

ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சி தொடர்பாக விசாரித்ததும் அந்த இளைஞர் அங்கிருந்து ஒட்டம் பிடித்தார். நடுரோட்டில் அவரை போலீஸார் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை ஆவடி ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரித்தபோது ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (27) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீஸார் கூறுகையில், ``ஹரிகிருஷ்ணன், கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி வீடு சென்னை பல்லவன்சாலை, காந்திநகரில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் அவரின் மனைவி இறந்துவிட்டார். அதனால், மனமுடைந்த அவர், மதுவுக்கு அடிமையானார். வேலைக்கும் சரிவரச் செல்வதில்லை.

ஹரிகிருஷ்ணன்

Also Read: `3 ஆண்டுகளாக மாற்றப்படாத பாஸ்வேர்டு; இஎம்ஐ நெருக்கடி!’- ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்கிய வங்கி ஊழியர்

மதுகுடிக்க பணம் இல்லை என்றதும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என திட்டமிட்டு கத்தியோடு அங்குச் சென்றுள்ளார். ஆனால், பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்கும் போது ஷட்டரை அவர் பூட்டியுள்ளார். மேலும் ஏடிஎம் மையத்திலிருந்த அலராமும் வேலை செய்யவில்லை. அதனால் 2 இயந்திரங்களையும் பொறுமையாக ஹரிகிருஷ்ணன் உடைத்துள்ளார். பணம் வைத்திருந்த லாக்கரை ரகசிய நம்பர் மூலம்தான் திறக்க முடியும். டிஜிட்டல் வசதிகொண்ட லாக்கரை ஹரிகிருஷ்ணனால் உடைக்க முடியவில்லை. அதனால் அதிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படவில்லை. முதல் தடவையாக ஹரிகிருஷ்ணன் கொள்ளை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இதற்கு முன் காவல் நிலையங்களில் வழக்குகள் இல்லை என்பதால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருந்தன" என்றனர்.

சிசிடிவி பதிவுகள் ஸ்பெஷல் டீமின் போலீஸாரின் கையில் கிடைத்த 2 மணி நேரத்துக்குள் ஹரிகிருஷ்ணன் சிக்கியுள்ளார். அதனால், ரயில்வே உயரதிகாரிகள் ஸ்பெஷல் டீம் போலீஸாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-avadi-police-arrested-youth-in-atm-attempt-theft

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக