சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவவதாக அறிவித்திருப்பதை தான் வரவேற்பதாகவும்,சசிகலா அரசியலில் இருக்க கூடாது என நினைத்து தினகரன் செயல்பட்டார், அது தற்போது நிறை வேறியிருக்கிறது என சசிகலாவின் தம்பியும், அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான திவாகரன் தெரிவித்திருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி சென்னை வந்த சசிகலாவிற்கு அ.ம.மு.கவினர் வழி நெடுக கொடுத்த உற்சாக வரவேற்பு அரசியலில் பேசு பொருளாக மாறியது. அப்போது தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறிய சசிகலா, ஒரு தாய் பிள்ளைகள் இணைந்து செயல்பட வேண்டும், அதுவே என் விருப்பம் என தெரிவித்தார்.
இதனால் அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பு நடக்கும், சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என அரசியல் ஆர்வலர்களால் பல யூகங்கள் பேசப்பட்டது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள் சிலரும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அ.தி.மு.கவில் துளியும் இடம் இல்லை என திட்டவட்டமாக கூறிவந்தனர்.
இதையடுத்து சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இது குறித்த பேச்சுக்கள் அதிகமானது. பா.ஜ.க தரப்பில் அ.தி.மு.க, அ.ம.முக இணைப்பு குறித்து பேசி வருவதாகவும் நிச்சயம் மாற்றம் இருக்கும் என அதனை விரும்பிய இரு தரப்பை சேர்ந்தவர்களும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் சசிகலா அரசியலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக சசிகலாவின் தம்பி திவாகரன் அரசியல் சூழ்நிலைகள் குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார். மீடியாக்கள் அவரிடம் பேட்டி கேட்டு தொடர்ந்து முயற்ச்சித்து வந்த போதும் `எல்லோரும் கொஞ்ச நாள் பொறுமையாக இருங்க உங்களுக்கு நல்ல தீனி இருக்கு’ என கூறிவந்தார்.
Also Read: அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் என்ன மாற்றம் நிகழும்? #VikatanPoll
இந்நிலையில் சசிகலாவின் முடிவுக்கு பிறகு, இது குறித்து திவாகரனிடம் கருத்து கேட்டோம். ``சசிகலா அம்மையார் சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின் வாங்குவதாக அறிவித்துள்ளார். அவரை சுற்றி இருக்க கூடிய எங்களுடைய சொந்தங்கள் சசிகலாவை முதுகில் குத்த ரெடியாக இருப்பதனாலேயே சசிகலா அரசியலில் இருந்து பின் வாங்குவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 25 வருடங்களாக அவருடன் இருந்து பல காரியங்களை சாதித்துக் கொண்டு சசிகலாவிற்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட, பழம் தின்று கொட்டை போட்ட கேடித்தனமான ஆட்கள் கொடுத்த நிர்பந்தமே அவர் இந்த முடிவிற்கு வர காரணம். சசிகலாவிற்கு உடம்பும் சரியில்லை,மனசும் சரியில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே அவருக்கான பாதுகாப்பிற்கான ஏற்பாட்டை செய்ய தவறிவிட்டார்.
அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பிற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த வேளையில் அ.தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரை கோபம் ஏற்படுத்தும் வகையில் பேசியதுடன் இணைப்பை கெடுக்கக் கூடிய வகையில் தினகரனின் நடவடிக்கை இருந்தது. சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம். அதற்கான ஏற்பாட்டையும் செய்து வந்தார். தற்போது சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருப்பதன் மூலம் தினகரனின் எண்ணம் நிறைவேறியிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்கள் வெயிட் பண்ணுங்க நிறைய பேசுகிறேன்.” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/divakaran-about-sasikala-quiting-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக