Ad

திங்கள், 1 மார்ச், 2021

`இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாக இருக்கும்!’ - ராகுல் காந்தி நம்பிக்கை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்திருக்கிறார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

பொதுக்கூட்ட மேடை

ராகுல் காந்தி பேசுகையில், ``தமிழ்நாட்டுக்கு நான் எப்போது வந்தாலும் என்னை வரவேற்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களின் அன்பு என்னை மகிழ்ச்சியடையவைக்கிறது. எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் தமிழக மக்களுக்கு நானும் மகிழ்ச்சியைத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்.

தமிழகத்துக்கு வரும்போது மட்டும் எனக்கு ஏன் ஆனந்தம் ஏற்படுகிறது என்பதை எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நீங்கள் எல்லோரும் என் பாட்டி இந்திராவின் மீதும், என் தந்தை ராஜீவ் காந்தி மீதும் வைத்திருந்த அன்புகூட காரணமாக இருக்கலாம். ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க நான் தமிழ் படிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

மேடையில் பேசும் ராகுல் காந்தி

தமிழகத்தில் உள்ளவர்கள் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களாக இருந்தாலும்கூட, அவர்களின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அது என்னை வியக்கவைக்கிறது. தமிழகம் இந்தியாவின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கும். தமிழகமும் தமிழர்களும் வருங்கால இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பார்கள்.

நாட்டின் மிகப்பெரிய சவாலாக வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது. ஆனால், மத்தியில் ஆளும் அரசு பெரும் வணிகர்களுக்கு ஆதரவாக இருக்கிறதே தவிர சிறு, குறு வணிகர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு அனைத்துத் தரப்பு மக்களின் பணத்தையும் களவாடிவருகிறது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதி

தமிழகத்தை மத்திய அரசு, ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி செய்கிறது. பிரதமர் சொல்வதையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்கிறார். மத்திய அரசு என்னை பயமுறுத்தவோ அச்சுறுத்தவோ முடியாது. காரணம், நான் நேர்மையானவன். அதைப் பிரதமரோ அல்லது தமிழக முதல்வரோ சொல்ல முடியுமா? நானும் நீங்களும் சேர்ந்தால் தமிழகத்துக்குப் புதிய பாதையைக் காட்ட முடியும்” என்று பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-nadu-will-lead-the-whole-nation-says-rahul-gandhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக