தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கட்சியினர் செய்யும் விளம்பரங்கள், பேனர்களை அப்புறப்படுத்தும் பணி உடனே தொடங்கியது.
தேர்தல் பறக்கும் படையினர், வாக்காளர்களுக்கு கொடுக்க, பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறை கூறுகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தென்னிலை சாலையில் வடிவேல் என்பவர் தனது காரில் 3 பேருடன், ரூ. 2 லட்சத்து 93 ஆயிரத்து 300 ரூபாய் கொண்டு சென்ற போது, கண்காணிப்புக் குழு அலுவலர் முருகன் தலைமையிலான குழு சோதனை மேற்கொண்டனர். அப்போது, வடிவேல் தனது காரில் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து, அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
Also Read: கரூர்: பாதியில் நிற்கும் சாலை; முழுமை பெறாத மைதானம்! - அவசரகதியில் திறக்கப்பட்ட திட்டங்கள்
அந்த பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாகக் கூறி, அரவக்குறிச்சி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். வடிவேல், தென்னிலைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி. அவர், மேச்சேரியில் ஆடு வாங்க பணம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், ஆடுகள் வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பினார். தகுந்த ஆவணங்களை காட்டிவிட்டு, பணத்தை பெற்றுச் செல்லுமாறு வடிவேலுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், கரூரில் முதன்முதலாக பணம் பிடிபட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/election/money-seized-from-farmer-by-election-officers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக