Ad

சனி, 13 மார்ச், 2021

நோய் எதிர்ப்பு சக்தி முதல் வைட்டமின்கள் வரை... பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா?

நம் உணவுப்பழக்கத்திற்கும் பருவ நிலைக்கும் எப்போதும் தொடர்புண்டு. குறிப்பாக நம் பாரம்பர்ய உணவுப்பழக்கங்கள் பருவநிலையை ஒட்டியே நாம் நம் உடலை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. மாசி மாதம் வந்து விட்டது. இனி போகப் போக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் எது மாதிரியான உணவுகள் இந்த கோடைக்காலத்தில் ஏற்றவை எனத் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறது அமெரிக்கன் நியூட்ரிஷியன் சொசைட்டி.

ஃபெர்மென்ட்டடு ரைஸ் டிரிங்க் (Fermented rice drink) என்று நீராகாரத்தை மேலை நாடுகளில் அட்டைப்பெட்டியில் அடைத்து விற்கிறார்கள். நம் பாரம்பர்ய உணவுகளில் ஒன்றான பழையது, நீராகாரம் என அழைக்கப்படும் பழைய சோறுதான் அது. அமெரிக்கன் நியூட்ரிஷியன் சொசைட்டி இதை சிறந்த காலை உணவு என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இதை நம் முன்னோர்கள் முன்பே தெரிந்து வைத்திருந்தார்களோ என்னவோ?

இந்த ஊட்டச்சத்து ஆய்வில் பழைய சோறு பற்றி கண்டுபிடிக்கப்பட்ட சில தகவல்கள் சுவாரஸ்யமானவை. அவை இங்கே...

பழைய சோறு

நொதிக்கப்பட்ட 100 கிராம் பழைய சோற்றில் வெறும் 134 கலோரிகளே உள்ளன. நார்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச்சத்து அதிகம் இருக்கின்றன. அதே நேரம் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து குறைவதனால் இது மிகவும் சத்தான உணவாக மாறுகிறது.

இதில் வடித்த சாதத்தைவிட ஊட்டச்சத்து அதிகம் இருப்பது மற்றும் வைட்டமின் பி 12 உண்டாவது போன்ற காரணங்களினால் இது உடல் சோர்வைப் போக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

சைவ உணவுப் பழக்கமுள்ளவர்களிடம் வைட்டமின் பி 12 குறைபாடு மிக அதிகமாக காணப்படுகிறது. அவர்களுக்கு பழைய சோறு வைட்டமின் குறைபாட்டை சரிசெய்யும். பழைய சோறு அமிலத்தன்மையைக் குறைப்பதால் அசிடிட்டி உள்ளவர்களுக்கு மருந்தாகிறது.

பழைய சோறு சாப்பிட்டால் குளிர்ச்சி, சளி பிடிக்கும் என்ற கருத்துகளுக்கு மாறாக, அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

உடல் வெப்பத்தைக் குறைக்கும் இந்த நீராகாரம் மிகச் சிறந்த காலை உணவு. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இது பயன் தரும்.

வடித்த சாதத்தைவிட சுண்ணாம்புச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் பன்மடங்கு அதிகம். இதில் லேசாகப் புளிக்கும் தன்மை உருவாக லாக்டிக் அமிலமும் நுண்ணுயிர்களும் (பாக்டீரியா) காரணமாக இருப்பதால் நம் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

வடித்த சாதத்தை ஒரு மண் சட்டியில் நீர் ஊற்றி இரவு முழுவதும் வைத்து விட வேண்டும். மறு நாள் காலை இதை நன்கு பிசைந்து, மத்தால் கடைந்த மோர் ஊற்றி, கல் உப்பு சேர்த்து பருகவும். மண் சட்டியில் நொதிக்க வைப்பதால் தனி மணத்தோடு பருகும்போதே குளுமையாக இருப்பதை உணரலாம்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நீராகாரம் யாருக்கு?

சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் இதை காலை உணவாக கோடைக் காலத்தில் பருகலாம்.

அஜீரணம் உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், காலை உணவு சாப்பிட்டால் சிரமமாக உணர்பவர்கள், உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் கூட இதை அன்றாடம் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் 54 சதவிகிதம் பேருக்கு ரத்தச்சோகை இருக்கிறது என்று (NFHS -4) ஆய்வு கூறுகிறது. பழைய சோறு நொதிக்கவைக்கப்படுவதால் இரும்புச்சத்து 3.4 மி.கி அளவிலிருந்து 73.9 மி.கிராமாக உயர்கிறது. எனவே அவர்களுக்கும் இது கைகொடுக்கும்.

இந்தக் கோடைக் காலத்தை சுறுசுறுப்பாகவும் சூப்பராகவும் கடக்க பழைய சோற்றுக்குப் பழகுவோம்.

- ஸ்ரீமதி வெங்கட்ராமன், கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்



source https://www.vikatan.com/health/healthy/a-clinical-dietitian-explains-about-nutritional-values-of-fermented-rice-drink

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக