Ad

புதன், 17 மார்ச், 2021

நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ் இரிடியம் மோசடியில் சிக்கியது எப்படி?

சென்னை வளசரவாக்கம் நெடுமாறன் தெருவைச் சேர்ந்தவர் நெடுமாறன் (68). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், `கடந்த 2013-ம் ஆண்டு அம்ரீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களிடம் அரியவகை இரிடியம் (ரைஸ் புல்லிங்) இருப்பதாகக் கூறினர். அதன் மதிப்பு பல கோடி என்றும் அதை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்தால் அதிக லாபத்திற்கு விற்கலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினர். அதை நம்பி சுமார் 26.20 கோடி ரூபாய் வரை கொடுத்தேன். ஆனால் போலியான இரிடியம் என்று ஒரு பொருளைக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார்கள். எனவே அம்ரீஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் அம்ரீஷ்

இந்தப் புகாரின் பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அம்ரீஷை போலீஸார் நேற்று பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரிடியம் மோசடியில் சிக்கிய அம்ரீஷ், பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மத்திய .குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``கைதான அம்ரீஷ் (33), சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டன், பொன்னி தெருவில் குடியிருந்து வருகிறார். இவர் ஒரு சினிமா இசையமைப்பாளர். நடிகர் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா, கெட்ட சிவா, நடிகர் அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ரஸ்கல், பிரபு தேவா நடித்த சார்லி சார்ப்ளின் - 2 உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் காட்சிகளை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் நெடுமாறனின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அம்ரீஷ் எடுத்திருக்கிறார்.

இரிடியம்

அப்போதுதான் நெடுமாறனுக்கும் அம்ரீஷுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. பட ஷூட்டிங்கின் போதே அம்ரீஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் நெடுமாறனிடம் இரிடியம் பிசினஸ் தொடர்பாக பேசியிருக்கின்றனர். இரிடியம் பிசினஸில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என நெடுமாறனுக்கு ஆசை வார்த்தைக் கூறியிருக்கின்றனர். பிசினஸ் தொடர்பாக நெடுமாறனை தனி விமானத்தில் மலேசியாவுக்கு 2015-ம் ஆண்டு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு இரிடியத்தை வாங்குவதாக ஒரு கம்பெனியைச் சேர்ந்தவர்களை நெடுமாறனிடம் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.

Also Read: `பூஜை அறையில் பள்ளம் தோண்டி சூன்யம்'- வீட்டுக்காகப் போராடும் நடிகை ஜெயசித்ரா 

நெடுமாறன் மற்றும் அம்ரீஷ் தரப்பு கொண்டு சென்ற கலசத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து சான்றிதழ் அளித்திருக்கின்றனர். பின்னர் அதற்கு விலை பேசப்பட்டு முதற்கட்டமாக நெடுமாறனுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதில் சில லட்சம் ரூபாயை அந்தக் கம்பெனி செலுத்தியிருக்கிறது. அதனால் நெடுமாறன் முழுமையாக இரிடியம் பிசினஸ் கும்பலை நம்பியிருக்கிறார். சென்னைக்கு வந்தபிறகு அந்தக் கம்பெனியிலிருந்து பேசிய தொகை நெடுமாறனுக்கு வந்து சேரவில்லை. அதனால் அம்ரீஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளை நெடுமாறன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் தலைமறைவாகியபிறகு தான் நெடுமாறன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். பின்னர் பணம் செலுத்தியதற்கான வங்கி ஆவணங்களோடு புகாரளித்தார்.

நடிகர் அம்ரீஷ்

அதன்பேரில் அம்ரீஷ் உள்ளிட்ட இந்த மோசடியில் தொடர்புடையவர்களைத் தேடியபோது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இந்தச் சமயத்தில்தான் அம்ரீஷ் சென்னை வந்த தகவல் எங்களுக்கு கிடைத்ததும் அவரைப் பிடித்து விசாரித்தோம். அம்ரீஷ் வங்கி கணக்கிற்கு மட்டும் சில கோடி ரூபாயை நெடுமாறன் அனுப்பியிருக்கிறார். அதன்அடிப்படையில் அவரைக் கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறோம்" என்றார்.

அம்ரீஷை போலீஸ் எனக்கூறி மப்டியில் வந்தவர்கள் அழைத்துச் சென்றதும் அதிர்ச்சியடைந்த நடிகை ஜெயசித்ரா நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று. உயரதிகாரிகளைச் சந்தித்து பேசினார். அப்போது, அம்ரீஷை இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்திருக்கும் என்ற தகவலை போலீஸ் உயரதிகாரிகள் கூறியதும் வருத்தத்துடன் நடிகை ஜெயசித்ரா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இரிடியம் மோசடி வழக்கில் நடிகையின் மகன் சிக்கிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/actress-jayachitra-son-arrested-in-iridium-cheating-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக