Ad

வியாழன், 4 மார்ச், 2021

விழுப்புரம்: கணவனை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி - திருமணம் மீறிய உறவு காரணமா?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் என்பவருடைய மகன் லியோபால் (33). இவர் சுஜித்ரா மேரி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

லியோபால் வேன் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். லியோபாலின் பெற்றோர்கள், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 4-ம் தேதி லியோபாலின் மனைவி சுஜித்ரா மேரி, தன்னுடைய மாமனார் சகாயராஜ்க்கு போன் செய்துள்ளார். 'பாண்டிச்சேரியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கணவரை காணவில்லை' என கூறியுள்ளார்.

குழந்தைகளுடன் லியோபால், சுஜித்ரா மேரி

இதையடுத்து கடந்த மாதம் 21ஆம் தேதி தன் மருமகளிடம், 'நான் சென்னையிலிருந்து புறப்பட்டு வருகிறேன். நாம் சென்று போலீசில் புகார் கொடுக்கலாம். நீ தயாராக இருமா' என கூறியுள்ளார் சகாயராஜ். சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது இரண்டு பேரக்குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, 'அம்மாவை காலையிலிருந்தே காணோம் தாத்தா' என மழலை மாறாத குரலில் கூறியிருக்கின்றனர்.

தன் மகன், மருமகளை காணவில்லை என்று அன்றைய தினமே விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சகாயராஜ். வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டியது போல தடையம் இருப்பதாகவும், அதில் தனக்கு சந்தேகமாக இருப்பதாகவும் காவலர்களிடம் தெரிவித்துள்ளார் சகாயராஜ். அதன்பேரில் நேற்று (03.03.2021) காலை வருவாய்த்துறை அதிகாரிகளுடன், டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையில், விக்கிரவாண்டி போலீஸ் குழுவினர் முன்னிலையில், அந்த இடம் தோண்டப்பட்டது. அப்போது தலை, கழுத்து பகுதிகளில் ரத்த காயங்களுடன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று சற்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தன்னுடைய மகன் தான் என சகாயராஜ் உறுதிப்படுத்தினார். பின்னர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

வீட்டின் அருகே சடலத்தை மீட்க தோண்டப்பட்ட குழி.

இதன் பின், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பக்கத்து வீட்டில் வசித்து வந்த கல்லூரி மாணவர் ராதாகிருஷ்ணன் (20) எனும் இளைஞருக்கும், சுஜித்ரா மேரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த லியோபால் தன் மனைவியான சுஜித்ரா மேரியை கண்டித்துள்ளார். இதை விரும்பாத மேரி, கணவனை தீர்த்துகட்டி விட வேண்டும் என முடிவு செய்து, ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கடந்த மாதம் 4ம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லியோபாலை தாக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது். கணவனைக் காணவில்லை என்று பொய் நாடகமாடியுள்ளார்.

மாமனார், 'காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம்' என அழைக்கவே, எங்கே உண்மை வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் கடந்த மாதம் 21-ம் தேதியிலிருந்து சுஜித்ரா மேரி ராதாகிருஷ்ணனுடன் தலைமறைவாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: சென்னை: வெளியில் பூட்டு; உள்ளே ஆபாச நடனம் - சுவர் ஏறிக் குதித்து நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் செந்தில் என்பவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

" இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் அருகே உள்ள இளைஞனுடன் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. தலைமறைவாக உள்ள சுஜித்ரா மேரி மற்றும் ராதாகிருஷ்ணனை தேடி வருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/vilupuram-wife-killed-and-buried-her-husband

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக