Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

கோயில் வாசலில் தலை... தண்டவாளத்தில் உடல் - தஞ்சையை அதிரவைத்த இளைஞரின் படுகொலை!

தஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், இளைஞர் ஒருவரின் தலையை தனியாக துண்டித்து கொலை செய்ததுடன், தலையினை கோயில் வாசலிலும், உடலை தண்டவாளத்திலும் வீசிவிட்டு சென்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் தஞ்சை பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இடம்

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டன் (19). இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிக்கு மணிகண்டன் சாப்பிடச் சென்றார்.

பின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து ரெட்டிப்பாளையம் புது ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஐந்து பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

தண்டவாளத்தில் கிடக்கும் உடல்

அதன் பிறகும் கோபம் குறையாத அந்த கும்பல், மணிகண்டனின் தலையை தனியாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் உடலை தண்டவாளத்திற்கு நடுவே போட்டு விட்டு தலையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளனர்.

மணிகண்டனின் வீட்டின் அருகே உள்ள அம்மன் கோயில் வாசலில், தலையை வைத்துவிட்டுச் சென்றனர். அதிகாலையில் அந்த பக்கமாக சென்றவர்கள் கோயில் வாசலில் தலை இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டன்

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலைக் கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.

Also Read: சென்னை: தனியாக செல்லும் பெண்களே குறி - தினமும் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

மணிகண்டன், முத்துராமன் தரப்பில் ஒருவரை வெட்டிக் கொல்ல முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கில் சிறைக்கு சென்று பெயிலில் வெளியே வந்தவர் மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பிரச்னையின் காரணமாகவே மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணையின் முடிவிலேயே எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரிய வரும் என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/thanjavur-youngster-beheaded-creates-unrest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக