ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பொது மக்களுக்கு பணம் பரிசு பொருள்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கக் கூடாது என்பதும் முக்கிய விதி.
ஆனால் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே,நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசு பொருள்களை வழங்கிய ஆளுங்கட்சியினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளாது. அதோடு பரிசு பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சியினர் சார்பில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.
இந்த நிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலையில்லா கோழிக்குஞ்சுகளை வீடு வீடாக வழங்கி வந்துள்ளனர். இதை அறிந்த எதிர்க்கட்சியினர், தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.நேரில் சென்று ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்து பண்ணைகளுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஆளுங்கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கவே இவை கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநர்,"ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே தற்போது கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன.தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பி விட்டோம்" என்றார்.
இது குறித்து பேசிய எதிர்க்கட்சியினர்," தேர்தல் நடத்தை விதிமுறைகளை கட்சியினருக்கு சொல்லித்தர வேண்டிய அரசு அதிகாரிகளே தேர்தல் விதிகளை மீறி இலவசமாக கோழிக் குஞ்சுகளை வழங்கியது விந்தையாக உள்ளது"என்கின்றனர்.
"விதிகளை மீறி மக்களுக்கு இலவசமாக கோழிக்குஞ்சுகளை வழங்கிய செயலில் தொடர்புடைய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மற்றொரு தரப்பினரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/general-news/code-of-conduct-violation-in-coonoor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக