Ad

திங்கள், 1 மார்ச், 2021

சென்னை: தனியாக செல்லும் பெண்களே குறி - தினமும் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் கடந்த 25-ம் தேதி பெண் ஒருவர் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அவர், தனியாக சாலையில் நடந்து சென்றபோது பின்னால் பைக்கில் 20 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் வந்தார். பெண்ணின் அருகில் வந்த இளைஞர், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் சுதாரிப்பதற்கு முன் இளைஞர் பைக்கில் வேகமாக சென்றுவிட்டார் என்றும், பாதிக்கப்பட்ட பெண், அடையாறு துணை ஆணையர் விக்ரமனைச் சந்தித்து புகாரளித்தார்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை

அடையாறு உதவி ஆணையர் கெளதமன் தலைமையில் தலைமைக் காவலர் சுப்பிரமணி, முதல் நிலை காவலர்கள் ராஜசேகர், மகேஸ்வரன், பன்னீர் ராஜா குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்திலிருக்கும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளை வைத்து, குற்றச் செயலில் ஈடுபட்டது பூந்தமல்லியைச் சேர்ந்த சரண் (21) எனத் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சரணைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சரண், கல்லூரி படிப்பை முடித்து விட்டு கடந்த 3 மாதங்களாக பூந்தமல்லியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். பணம் வசூலிப்பதற்காக செல்லும் இடங்களில், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், மாணவிகளைச் சரண் பின் தொடர்ந்துச் செல்வார். அவர்கள் அசரும் நேரத்தில், பாலியல் ரீதியாக சீண்டிவிட்டு பைக்கில் வேகமாகச் சென்றுவிடுவார். என்ன நடந்தது என்று பெண்கள், மாணவிகள் சுதாரிப்பதற்குள் சரண் தப்பிவிடுவதால் பலர் காவல் நிலையங்களில் புகாரளிக்கவில்லை.

சரண்

அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சரண், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அதனால் சரண் மீது வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள் தயங்காமல் காவல் நிலையங்கள் அல்லது 8754401111 என்ற செல்போன் நம்பரில் புகாரளிக்கலாம்" என்றனர்.

சரண் குறித்து இன்னொரு தகவல் ஒன்றையும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். ``சரண் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். சாலையில் தனியாக பெண்கள் நடந்து சென்றால் அவர்களை பின்தொடர்ந்துச் செல்லும் சரண், அதன்பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆகி வந்திருக்கிறார். இதுவரை சிக்காத சரண் மீது முதல் தடவையாக சாஸ்திரி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். செல்ஃபி பிரியரான சரணுக்கு தோழிகள் அதிகளவில் இருக்கின்றனர். சரணின் அப்பா டிரைவராக உள்ளார்" என்றார்.

Also Read: சென்னை: மாமியாருக்கு வைத்த குறி; சிக்கிய மருமகள்! - நகைக்காக நடந்த கொடூரக் கொலை

எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய் என்று சரணிடம் போலீஸார் விசாரித்தபோது, `தனியாக பெண்கள் நடந்துச் சென்றாலே அவர்களைப் பின்தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டுதான் செல்வேன். தினமும் 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பேன்' என்று கூறியிருக்கிறார்.

தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சரணை தனிப்படை போலீஸார் கைது செய்ததற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் (தெற்கு) கண்ணன், தெற்கு மண்டல இணை கமிஷனர் லட்சுமி ஆகியோர் பாராட்டினர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-for-molesting-women-who-are-walking-alone-in-roads

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக