Ad

வியாழன், 12 நவம்பர், 2020

`இனிமேல் இரட்டை லாபம்!' - தென்னை மதிப்புக்கூட்டு மையம் குறித்து குமரி தென்னை விவசாயிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10-ம் தேதி ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர் சந்திப்பின்போது, ``வேளாண்மைத் துறையால் செண்பகராமன்புதூரில் தென்னை மதிப்புக்கூட்டுதல் மையம் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டு பண்ணையத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்" என அறிவித்தார். செண்பகராமன்புதூரில் அமையும் தென்னை மதிப்புக்கூட்டு மையம் தென்னை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறுகிறார்கள்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவன சேர்மன் அப்துல் ரகுமானிடம் பேசினோம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 102 தென்னை உற்பத்தியாளர் சங்கத்தை தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்து, தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தை அமைத்திருக்கிறோம். இதை மத்திய அரசின் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்திலும் பதிவு பண்ணியிருக்கிறோம். நாங்கள் குமரி மாவட்டத்தில் தென்னை மதிப்புக்கூட்டு வாரியம் அமைக்க வேண்டும்னு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மூலம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கோரிக்கை வச்சோம். இதுக்காக அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் கமிஷனரையும் சந்தித்தோம்.

கன்னியாகுமரி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவன சேர்மன் அப்துல் ரகுமான்

இதையடுத்து 110 விதியின் கீழ் 16 கோடி ரூபாய் மதிப்பில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் செண்பகராமன் புதூரில் அமைப்பதாக ஒரு வருஷத்துக்கு முன்னாடி அறிவிச்சாங்க. கடந்த ஒரு வருஷம் முன்னாடி அரசாணை வெளியிட்டு வேலை வேகமாக நடக்கிறது. வரும் பிப்ரவரி மாசத்தில வேலை நிறைவு செய்து தொழில் தொடங்கும் வேலைகள் நடக்கும். இந்த மையத்தில தேங்காயில இருந்து உருக்கு எண்ணெய், குளிர்வித்தல் முறையில் தயாரிக்கப்படும். ஒரு நாளைக்கு 20,000 தேங்காய் கெப்பாசிட்டியில இந்த வேலை நடக்கும்.

அடுத்ததா மரச்செக்கு தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படும். மரச்செக்குல இருந்து 16 சதவிகிதம் பிழிதிறனில் சக்கை கிடைக்கும். அதை எக்ஸ்பெல்லரில் போட்டு தேங்காய் எண்ணெய்யாக எடுப்போம். இதுபோக தேங்காய் தண்ணீரில் இருந்து விநிகர் தயாரிக்கிறோம். தேங்காய் சிரட்டையில் (ஓடு) இருந்து ஷெல் சார்க்கோல் (கார்க்கோல்) தயாரிக்கிறார்கள். வாட்டர் பியூரிஃபயருக்கு மிஷின், ஏசி மிஷின் ஆகியவற்றில் பயன்படுத்தும் ஆக்டிவேட்டர் கார்பன் தயாரிக்க இந்த சார்க்கோல் பயன்படுகிறது.

தென்னை மதிப்புக்கூட்டு மைய கட்டுமான பணிகள்

தென்னை மதிப்புக்கூட்டு மையத்துக்கான கட்டடங்கள், விற்பனை நிலையங்கள், அலுவலகங்கள், அடிப்படை வசதிகளுடன் சுமார் நான்கு ஏக்கரில் அமைகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென்னை விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இப்போது தென்னை விவசாயிகள் தேங்காயை மிகக்குறைந்த விலையில வியாபாரிகள்கிட்ட வித்துகிட்டு இருக்காங்க. தென்னை விவசாயிகள் தங்களை இதில உறுப்பினராகப் பதிவு செய்யும்போது, அவங்க அவ்வளவுபேருமே உற்பத்தியாளராக ஆகிடுவாங்க.

மதிப்புக்கூட்டுப்பொருள் உற்பத்தி செய்யும்போது அவ்வளவுபேருமே தேங்காய கம்பெனிக்கு கொடுக்கிறபோது வியாபாரிகளைவிடவும் கூடுதல் விலையில் அவங்களுக்கு கொடுப்போம். அதுமட்டும் இல்லாம மதிப்புக்கூட்டுப் பொருள்கள் விற்பனையாகும் லாபத்தில் பங்குத்தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால தேங்காய் விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கும்" என்றார்.

கன்னியாகுமரி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன்

கன்னியாகுமரி மாவட்ட தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் இதுபற்றி கூறுகையில், ``தென்னை மதிப்புக்கூட்டு மையம் செயல்படத் தொடங்கினால் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை அவர்கள் கொள்முதல் செய்வார்கள். காய்க்கும் பருவத்தில் உள்ள குறைந்தது 10 தென்னை மரம் உள்ளவங்க இதில உறுப்பினராகச் சேரலாம். அப்பிடி உறுப்பினராக உள்ளவங்ககிட்ட இருந்து தென்னை மதிப்புக்கூட்டு மையம் மூலம் நேரடியா தேங்காய் கொள்முதல் செய்வாங்க. இதனால் குமரி மாவட்டத்தில விளையும் தேங்காய்களை மாவட்டத்துக்குள்ளேயே விற்பனை செய்யலாம். தேங்காய்க்கு குறிப்பிட்ட ஆதார விலை ஏற்படுத்துவாங்க. தென்னை மதிப்புக்கூட்டு மையம் கன்னியாகுமரி மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்" என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/kanyakumari-coconut-farmers-speaks-about-new-coconut-value-addition-centre

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக