Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

நவராத்திரி முதல் நாள் வழிபாடு... கொலு வைக்காதவர்களும் சிறப்பாகக் கொண்டாடுவது எப்படி? #GoluGuidance

ஒன்பது நாள்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படக்கூடிய பண்டிகைதான் இந்த நவராத்திரி. அம்பாளை நினைத்து வழிபடும் பண்டிகை என்பதால், இந்த வழிபாடானது முழுக்க முழுக்க பெண்களுக்கே உரிய ஒரு பண்டிகை என்றுகூட சொல்லலாம். சிவனுக்கு ஒரு ராத்திரி அது ‘சிவராத்திரி’. அம்பாளுக்காகக் கொண்டாடப்படும் ராத்திரி நவராத்திரி என்று சொல்லுவார்கள்.

இந்த வருடம் நவராத்திரி, இன்று ஐப்பசி 1-ம் தேதி தொடங்குகிறது.

நவராத்திரி கொலு

உங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இருந்தால், அந்த முறைப்படி கொலு வைத்து, நவராத்திரி பூஜையை தொடங்கலாம். வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை என்ற போதிலும், ஆசை இருக்கும் பட்சத்தில், வீட்டிலிருப்பவர்கள் சம்மதத்தோடு கொலு வைக்கலாம்.

கொலுவை வீட்டில் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அம்பாளை நினைத்து மனதார வேண்டிக்கொண்டு, ‘எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை. இருப்பினும் கொலு வைத்து வழிபடுவதற்கு அருளாசியை வழங்க வேண்டும்' என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அதன் பின்பு கொலு வைக்கலாம்.

கொலு வைக்காமலும், இந்த நவராத்திரி தினத்தை நிறைவாகக் கொண்டாட முடியும். அந்த வரிசையில் முதல் நாள் நவராத்திரியை வீட்டில் சுலபமாக எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்து முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

Also Read: நவராத்திரி: முதல்படி முதல் கடைசிப்படி வரை... எந்தெந்த பொம்மைகள் வைக்கலாம்? #GoluGuidance

நவராத்திரியின் முதல் 3 நாள்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. முதல் நாள் மகேஸ்வரி அம்மனை நினைத்துதான் நவராத்திரியைத் தொடங்க வேண்டும். வீட்டு வாசற்படியில் புள்ளி வைத்து, கம்பிக் கோலம் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மாலையில் அம்மனுக்கு மல்லிகைப்பூ, வில்வ இலையால் அலங்காரம் செய்து விட்டு, தீபம் ஏற்றி, வெண்பொங்கலை நைவேத்தியமாகப் படைத்து, வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்களை வீட்டிற்கு அழைத்து, தாம்பூலத்தை தானமாக கொடுப்பது சிறப்பினைத் தேடித்தரும்.

குறிப்பாக முதல் நாளில் பச்சை நிறம் மிகவும் உகந்ததாக  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும், பச்சை நிறத்தில் வளையல் அல்லது பச்சை நிற ரவிக்கை துணி இப்படிப்பட்ட பொருள்களை தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பது மேலும் சிறப்பினைத் தேடித்தரும். இதனோடு அம்மனுக்கு படைத்த வெண்பொங்கலையும் கொடுக்க வேண்டும்.

வளையல், ரவிக்கைத்துணி என்று எதையுமே தானமாக கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, நெற்றியில் இட்டுக்கொள்ளக் குங்குமம் மட்டும் கொடுத்தால் கூடப்போதும். இந்த வகையில் முதல் நாள் வழிபாட்டை நிறைவாகச் செய்து முடித்தால், வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை இல்லாத, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி பிறக்கும்.



source https://www.vikatan.com/spiritual/gods/how-to-make-the-first-day-of-navaratri-worship-easy-without-golu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக