Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

இளம் வயதில் உதவிய கணித ஆசிரியர்... நன்றிக்கடனாக ஒரு லட்சம் பங்குகளை வழங்கிய வங்கி சி.இ.ஓ!

நன்றி மறப்பது நன்றன்று என்கிற வார்த்தைகள் இந்தக் காலத்தில் சொன்னால், அதைக் கேட்டு பலரும் சிரிக்கத்தான் செய்வார்கள். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உதவி செய்த ஆசிரியரை மறக்காமல், அவர் செய்த உதவிக்கு கைம்மாறு செய்திருக்கிறார் ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கியின் சி.இ.ஓ-வான வி.வைத்தியநாதன்.

தக்க சமயத்தில் உதவிய கணித ஆசிரியர்

தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியநாதனின் அப்பா, வட இந்தியாவில் பல மாநிலங்களில் வேலை பார்த்தவர். இதனால் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யா பள்ளிகளில் படித்தார் வைத்தியநாதன். பஞ்சாபில் உள்ள பதான்கோட் நகரில் உள்ள பள்ளியில் படித்த பின், ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் படிக்க வைத்தியநாதனுக்கு இடம் கிடைத்தது.

ஆனால், பஞ்சாபிலிருந்து ஜார்க்கண்டில் இருக்கும் ராஞ்சிக்கு ரயிலில் பயணம் செய்வதற்கு அவருக்கு ரூ.500 தேவைப்பட்டது. அந்தப் பணம் அவரிடம் இல்லை. இதனால் அவர் ராஞ்சிக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்கிற நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் அவருக்குத் தேவையான 500 ரூபாயைத் தந்து உதவினார் பதான்கோட் பள்ளி கணித ஆசிரியர் குர்தியால் சரூப் சைனி (Gurdial Saroop Saini).

இந்த உதவியை ஆசிரியர் மறந்தாலும் வைத்தியநாதன் மறக்கவே இல்லை. தக்க சமயத்தில் உதவிய அந்த ஆசிரியருக்குக் கைம்மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வைத்தியநாதன் மனதில் இருந்துகொண்டே இருந்தது. படித்து முடித்த பின், அவரை எங்கெங்கோ தேடிப் பார்த்தார். அவர் முகவரி கிடைத்தபாடில்லை. கடந்த மாதம்தான் அந்த ஆசிரியர் இருக்கும் இடம் வைத்தியநாதனுக்குத் தெரிய வர, ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளில் இருந்து ஒரு லட்சம் பங்குகளை அந்த ஆசிரியருக்குத் தானமாக கொடுத்திருக்கிறார் வைத்தியநாதன்.

இந்தப் பங்குகளின் இப்போதைய மதிப்பு சுமார் ரூ.30 லட்சம். இந்தத் தகவலைக்கூட அவர் வெளியிடவில்லை. பங்குச் சந்தை அமைப்புகளுக்கு ஐ.டி.எஃப்.சி வங்கி எழுதிய கடிதம் மூலம்தான் இந்தத் தகவல் தெரிய வந்திருக்கிறது.

IDFC First Bank

இது முதல்முறை அல்ல

நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, வைத்தியநாதன் பங்குகளை அன்பளிப்பாக அளிப்பது இதுதான் முதல் முறை அல்ல. கேப்பிடல் ஃபர்ஸ்ட் மற்றும் ஐ.டி.எஃப்.சி வங்கிகள் இணைந்து ஐ.டி.எஃப்.டி பர்ஸ்ட் என்னும் வங்கியை 2018-ம் ஆண்டு உருவாக்கின. இந்த இணைப்புக்கு முன்பாக கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது தனக்கு உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள், முன்னாள் ஊழியர்கள் எனப் பலருக்கும் 4.30 லட்சம் பங்குகளை அன்பளிப்பாக வழங்கினார்.

23 பணியாளர்கள் மற்றும் மூன்று முன்னாள் பணியாளர்களுக்கு தலா 11,000 பங்குகளை அன்பளிப்பாக அப்போது வழங்கினார். வீட்டுப் பணியாளர்கள், டிரைவர் உள்ளிட்ட ஐந்து பணியாளர்களுக்கு தலா 6,500 பங்குகளை அன்பளிப்பாக வழங்கினார். தவிர, 1.10 லட்சம் பங்குகளைக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

மூன்று நபர்கள் அப்போது பணியில் இல்லை என்றாலும் அவர்கள் செய்த முக்கியமான பங்களிப்புக்காக அந்தப் பங்குகளை பரிசாக வழங்கியதாக வைத்தியநாதன் அப்போது தெரிவித்தார். இந்தப் பங்குகளின் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.20 கோடி. இதில் முக்கியமான விஷயம், குடும்ப உறுப்பினர்கள் யாரும் இவருடைய சட்டபூர்வமான வாரிசுகள் கிடையாது.

V.Vaidyanathan

வித்தியாசமான தொழிலதிபர்

தன்னை உருவாக்கி வளர்த்துவிட்ட சமூகத்துக்கு தான் சேர்த்த சொத்துகளைத் தருவது (Giving back to Society) ஒருவகை. அமெரிக்காவின் வாரன் பஃபெட், பில்கேட்ஸ் போன்ற பலர் இதற்கு உதாரணம் சொல்லலாம். இவர்களைப் போல, நம் நாட்டில் விப்ரோ அசிம் பிரேம்ஜி, ஹெச்.சி.எல் ஷிவ் நாடார் ஆகியோரைச் சொல்லலாம். அது மாதிரி செய்யாமல், தனக்கு நேரடியாக உதவியவர்களுக்கு கைம்மாறு செய்யும் வைத்தியநாதன் வித்தியாசமான தொழிலதிபர்தான்!



source https://www.vikatan.com/business/news/idfc-first-bank-ceo-vaidyanathan-gifts-one-lakh-shares-to-his-former-school-teacher

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக