Ad

சனி, 3 அக்டோபர், 2020

தூங்கிக்கொண்டிருந்த தந்தை, மகள் வெட்டிக் கொலை! - வேலூரை அதிரவைத்த கொடூரம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியை அடுத்துள்ள ஜார்தான் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (45). இவருடைய மனைவி பாஞ்சாலை. இவர்களின் பத்து வயது மகள் தீபா. வேப்பங்குப்பம் அடுத்துள்ள ரங்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்ஷர்பாஷா. இவரது விவசாய நிலத்தில்தான் கடந்த 15 ஆண்டுகளாக பொன்னுசாமி வேலை செய்துவந்தார். நிலத்திலிருக்கும் சிறிய வீட்டில், தன் மனைவி மகளுடன் பொன்னுசாமி தங்கியிருந்தார்.

தந்தை-மகளின் சடலம்

இந்தநிலையில், நேற்று இரவு வழக்கம்போல் மனைவி, மகளுடன் உறங்கிக்கொண்டிருந்த பொன்னுசாமி, இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அருகில், அவருடைய மகள் தீபாவும் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். கணவனும் மகளும் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை, அருகிலிருந்த சிலரை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

Also Read: நெல்லை: வெடிகுண்டு வீசி, கழுத்தை அறுத்து இரு பெண்கள் கொடூரக் கொலை! - உறையவைத்த பழிக்குப் பழி சம்பவம்

அந்தப் பகுதி மக்கள் வந்து பார்த்துவிட்டு, உடனடியாக வேப்பங்குப்பம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். டி.ஐ.ஜி காமினி, எஸ்.பி செல்வகுமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி காமினி விசாரணை

இதையடுத்து, கொலைக்கான காரணம் தெரியவந்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில், தவறான தொடர்பால் இரட்டைக் கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் சொல்கிறார்கள். இதுகுறித்து, வேலூர் எஸ்.பி செல்வகுமாரிடம் கேட்டபோது, ``தவறான உறவால் கொலை நடந்திருக்கிறது. கொலையாளியை நெருங்கிவிட்டோம். கைது நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் மற்ற தகவல்களை தெரிவிக்கிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/father-daughter-killed-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக