ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கிறார் யோகி பாபு. ஜெய்ப்பூரில் விஜய் சேதுபதி பட ஷூட்டிங் இருந்தவரிடம் பேசினேன்.
இந்தியில் ஆமீர்கான் படம், கன்னடத்தில் சிவராஜ்குமார் படம்னு மற்ற மொழி படங்களில் நீங்க நடிக்கிறதா செய்திகள் வந்தன; அது உண்மையா, உங்களோட பலமே காமெடி கவுன்ட்டர்ஸும் நீங்க பேசுற ஸ்லாங்கும்தான், அது மற்ற மொழிகளில் நடிக்கும்போது சிரமமாக இருக்காதா?
’’ஆமீர்கான் சார் படத்துக்காக என்னை கேட்டது உண்மைதான். படம் முழுக்க ஆமீர்கான் சாரோடு இருக்கிற மாதிரி ரொம்ப முக்கியமான கேரக்டர். ஆனால், அவங்க உடனே ஷூட்டிங் போகணும்னு கால்ஷீட் கேட்டாங்க. எனக்கு அப்போ சில படங்களோட ஷூட்டிங் போயிட்டு இருந்தனால, அந்தப் படத்தில் என்னால நடிக்க முடியாமல் போயிடுச்சு. சிவராஜ்குமார் சார் படத்தில் நடிக்கிறது கன்ஃபார்ம்தான். தமிழில் ’ஈட்டி’, ’ஐங்கரன்’ படத்தை இயக்கிய ரவிஅரசுதான் அந்தப் படத்தை இயக்குறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ்தான் தயாரிக்கிறாங்க. தயாரிப்பாளர், இயக்குநர்னு எல்லாருமே தமிழ்தான். சிவ ராஜ்குமார் சாரும் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்தான். கன்னட சினிமா ரசிகர்களுக்கும் தமிழ் பரிச்சயம்தான். அதனால, இந்தப் படத்தில் என்னை தமிழ் பேசுற ஆளாத்தான் நடிக்க வைக்கிறாங்க. சில வசனங்கள் மட்டும் கன்னடத்தில் இருக்கும்னு சொன்னாங்க. மற்ற மொழி படங்களா இருந்தாலும், தமிழ் படங்களுக்கு ஒன்லைன் பன்ச் வொர்க் பண்ற மாதிரி அந்தப் படங்களுக்கும் வொர்க் பண்ணி, அதை அந்த மொழியில் சொல்லப் போறோம்; அவ்வளவுதான். மத்தப்படி, மொழி மாறி நடிக்கிறதுனால பெரிய சிரமங்கள் இருக்கும்னு எனக்கு தோணலை. இன்னும் இந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கலை; ஆரம்பித்ததுக்கு அப்பறம்தான், சிரமங்கள் எதாவது இருக்கானு தெரியும்.’’
நீங்க நடிச்ச காமெடி கதாபாத்திரங்கள் ஹிட்டான அளவுக்கு, குணசித்திர கேரக்டர்களில் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது. மறுபடியும் இப்படி ஒரு கேரக்டர் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலாமா?
’’என் மனைவிக்கும் ’ஆண்டவன் கட்டளை’ படத்தில் நான் நடிச்ச கேரக்டரும், ’பரியேறும் பெருமாள்’ ஆனந்த் கேரக்டரும் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க. அந்தப் படங்கள்ல ரொம்ப நல்லா நடிச்சிக்கேன்னும் சொன்னாங்க. எனக்குமே காமெடி கேரக்டர்கள் பண்ணிட்டு இருக்கும்போது இப்படிப்பட்ட குணசித்திர கேரக்டர்களை இடையில் பண்ணணும்னுதான் ஆசை. அதுக்கான கதைகளும் கேட்டுட்டு இருக்கேன். இப்போ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் சார் நடிச்சிருக்கிற ’கர்ணன்’ படத்திலேயும் எனக்கு அப்படிப்பட்ட குணசித்திர கேரக்டர்தான். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் மாரி செல்வராஜ் எனக்கு கொடுத்த கேரக்டரைவிட, ’கர்ணன்’ படத்தில் இன்னும் பெரிய கேரக்டர் கொடுத்திருக்கார். நிச்சயமா இந்த கேரக்டருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதே மாதிரி, விஜய் சேதுபதியோடு நான் நடிச்சிருக்கிற ‘கடைசி விவசாயி' படத்திலும் எனக்கு ஒரு குணசித்திர கேரக்டர்தான்.’’
தமிழ் சினிமாவில் இருக்கிற காமெடி நடிகர்கள் ஸ்கிரிப்ட் எழுத தங்களுக்கென ஒரு டீம் வெச்சுருப்பாங்க. அப்படி யோகி பாபுவோட டீமில் யாரெல்லாம் இருக்கா?
’’எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அப்படி ஒரு டீம் இல்லை. நூற்றுக்கணக்குல படங்கள் பண்ணிட்டேன்; நான் என்ன பண்ணணும்னு இயக்குநர்களே தெளிவா சொல்லிடுவாங்க. அதனால, அவங்க சொல்றதோடு எனக்கு தேவைப்படுற சில ஒன்லைன் பன்ச், காமெடி கவுன்ட்டர்ஸை நானே எழுதிப்பேன். அதுக்காக அப்படி ஒரு டீம் வெச்சுக்கிறது தப்புனு சொல்ல வரலை. அவங்கவங்க அவங்களோடு வசதிக்கு ஏற்றமாதிரி வொர்க் பண்றாங்க. எனக்கு தனியா வொர்க் பண்றதுதான் வசதியா இருக்கு.’’
மற்ற காமெடி நடிகர்களோடு சேர்ந்து நடிப்பீங்களா?
’’நிச்சயமா நடிப்பேன். விவேக் சாரோடு ’பிகில்’ படத்தில் நடிச்சேன். இப்போ ’அரண்மனை - 3’ படத்தில் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிட்டு இருக்கோம். ’டகால்டி’, ’டிக்கிலோனா’னு சந்தானம்கூட ரெண்டு படம் நடிச்சிருக்கேன். இன்னும் நிறைய காமெடி நடிகர்களோடு சேர்ந்து நடிக்கணும்னு ஆசைப்படுறேன். குறிப்பா, கவுண்டமணி சார்கூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை.’’
Also Read: யோகி பாபு ஹீரோ; பா.இரஞ்சித் தயாரிப்பு... கதை என்ன தெரியுமா?
’ஜெயம்’ ரவி உங்களை வெச்சு ஒரு படம் இயக்கப்போறதா சில பேட்டிகளில் சொன்னாரே?
’’ஆமா. என்னை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு ரவி சார் ரொம்ப ஆசைப்படுறார். கதையும் சொல்லிட்டார். கதை ரொம்ப நல்லா இருந்தது; அவர் ரொம்ப நல்லா கதை சொன்னார். இப்போ அவர் பிஸியா நடிச்சிட்டு இருக்கிறதுனால, படம் இயக்குறதுக்கு நேரம் இல்லை. அவர் எப்போ படம் இயக்கினாலும், அதில் என்னை நடிக்க வைக்கிறேன்னு சொல்லியிருக்கார்.’’
source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-yogi-babu-interview-about-his-career-and-upcoming-projects
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக