Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பால் ஆபத்தில் சுறா மீன்கள்... ஏன்

கோவிட் -19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதன் மூலம் உலகம் முழுவதையும் நோய்ப் பரவலிலிருந்து காப்பாற்ற அரை மில்லியன் சுறாக்கள் கொல்லப்பட வேண்டியிருக்கும் என்று கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஷார்க் அல்லீஸ் (Shark Allies) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், உலகில் இருக்கும் மொத்த மக்கள் தொகையினருக்கும் இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பு மருந்து வழங்கவேண்டும் என்றால் 5 லட்சம் சுறாக்களிடம் இருந்து கல்லீரல் எண்ணெயைப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், அதில் ஸ்குவாலின் என்ற தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஸ்குவாலீன் என்பது சுறாவின் கல்லீரல் எண்ணெயில் இருந்து பெறப்படும் ஓர் இயற்கை கரிமமாகும். இது தடுப்பு மருந்துகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இம்மருந்தினை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படும் என்று ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் படி 176 தடுப்பு மருந்துகளில் 17 மருந்துகளுக்கு, துணை மருந்தும் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தத் துணை மருந்துகளில் 5 தடுப்பு மருந்துகள் சுறா ஸ்குவாலீன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது. MF59 என்ற துணை மருந்து, 9.75 மி.கி. ஸ்குவாலீன் அளவைப் பெற்றுள்ளது. ஒரு டன் ஸ்குவாலீனைப் பிரித்தெடுக்க சுமார் 3,000 சுறாக்கள் தேவைப்படுகிறன. உலகில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இம்மருந்து தேவைப்படுமெனில் 2.5 லட்சம் சுறாக்கள் கொல்லப்படலாம். அதேநேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட மேலும் டோஸ்களின் அளவு இரட்டிப்பாக்கப்பட்டால் கிட்டத்தட்ட 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

"கல்பர் சுறா மற்றும் பாஸ்கிங் சுறா ஆகியவை ஸ்குவாலீன் அளவை அதிகமாகக் கொண்டிருக்கும் சுறா வகைகள். அழிவு நிலையில் இருக்கும் இனமாகவும் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்யாத விலங்குகளாகவும் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் 19 தொற்றுநோய் இனி எவ்வளவு காலம் செல்லக்கூடும், அதன் வீரியம்னஆகியவை பற்றிய முழுமையான தகவல்கள் கண்டறியப்படமால் இருக்கும்பட்சத்தில், மருந்து உற்பத்திக்காக பெருமளவில் வேட்டையாடுவது சுறா இனத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என ஷார்க் அல்லீஸ் (Shark Allies) நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்டெபானி பிரெண்ட்ல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி வலைத்தளத்திடம் கூறினார்.

சுறா இனத்தின் அழிவைத் தவிர்ப்பதற்காக, ஸ்குவாலீனுக்கு மாற்றாக நொதித்த கரும்பிலிருந்து ( fermented sugarcane) தயாரிக்கப்படும் ஒரு செயற்கை பதிப்பில் விஞ்ஞானிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். பாதுகாவலர்களால் செய்யப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் மூன்று மில்லியன் சுறாக்கள் ஸ்குவாலீனுக்காக கொல்லப்படுகின்றன. அவை அழகு சாதனப் பொருள்கள் மற்றும் இயந்திர எண்ணெய்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

தடுப்பு மருந்து

COVID-19 தடுப்பு மருந்தில் 100 கோடி டோஸ் உற்பத்தி செய்வதாக அறிவித்துள்ள பிரிட்டிஷ் பார்மா நிறுவனமான கிளாசோஸ்மித்க்லைன், ஏற்கனவே காய்ச்சல் தடுப்பூசிகளை தயாரிக்க சுறா ஸ்குவாலீனைப் பயன்படுத்தி வருகிறது. எவ்வாறாயினும், தடுப்பு மருந்துகளின் வெகுஜன உற்பத்திக்கான இந்த திடீர் அதிகரிப்பு சுறாக்களை அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், இறுதியில் அவற்றின் அழிவிற்கு வழிவகுக்கும் என்று பாதுகாப்பாளர்கள் அஞ்சுகிறார்கள்.

இதுவரை 3.3 கோடி மக்களை பாதித்து உலகெங்கிலும் 10 லட்சம் பேரைக் கொன்ற கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதன் உற்பத்திக்காக அழிக்கவேண்டிய சுறாக்களின் எண்ணிக்கை நாம் கணித்ததைவிட அதிகமாகக்கூட இருக்கலாம்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/around-5-lakh-sharks-may-be-killed-for-covid-19-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக