Ad

சனி, 4 மார்ச், 2023

விழுப்புரம்: `பாலியல் ஆசைக்கு இளம்பெண் இணங்காததால் தற்கொலை' - இளைஞரின் மர்ம மரண பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வதுரை (23). அதே பகுதியில், நெல் அறுவடை வண்டியின் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 28-ம் தேதி இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அரசூர் பகுதியில், பின் தலை, கைகளில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்த அவரின் உடலைக் கைப்பற்றிய திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், செல்வதுரையின் மரணம் தொடர்பான அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 

உயரிழந்த நிலையில் செல்வதுரை

செல்வதுரையின் போன் தொடர்புகளை சோதித்த போலீஸார், ராணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். அப்போதுதான் திடுக்கிடும் பின்னணி விவரங்கள் தெரியவந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் ராணியை, செல்வதுரை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். இதையறிந்த ராணியின் பெற்றோர், ராணிக்கு தங்கள் உறவினர் மகனுடன் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். தற்போது ராணிக்கு 1 வயதில் குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது. ராணியின் கணவர், சில மாதங்களுக்கு முன்னர் வேலை விஷயமாக வெளிநாட்டுக்குச் சென்றாராம். அதனால், தன்னுடைய தாய் வீட்டில் ராணி இருந்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில், ராணியை ஒருதலையாக காதலித்து வந்த செல்வதுரை... ராணி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, `சமூக வளைதளத்தில் பதிவிட்டு விடுவேன்' என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது பாலியல் ஆசைக்கு இணங்கும்படி ராணியைக் கட்டாயப்படுத்தினாராம். இதனால், ராணி தன் கணவர் வீட்டுக்கே சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், ராணியின் வீட்டுக்கே சென்ற செல்வதுரை, பலமுறை கட்டாயப்படுத்தி ராணியை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று ராணியின் வீட்டுக்குச் சென்ற செல்வதுரை... தனது பாலியல் ஆசைக்கு இணங்கும்படி ராணியைக் கட்டாயப்படுத்தினாராம். ஆனால், அதற்கு ராணி மறுப்பு தெரிவித்திருக்கிறார். 

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்

இதனால் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக, `தற்கொலை செய்து கொள்வேன்' என தனி அறைக்குச் சென்று ராணி கதவை பூட்டிக்கொண்டாராம். ராணி தற்கொலை செய்துகொண்டால் பிரச்னை ஆகிவிடுமே என்று அஞ்சிய செல்வதுரை, ராணியின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். அறையிலிருந்து வெளியில் வந்து ராணி பார்த்தபோது, செல்வதுரை தூக்கிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தாராம். இந்த நிலையில், தன்னுடைய ஆண் நண்பர் பரத் என்பவரை உதவிக்கு அழைத்திருக்கிறார். தன்னுடன் மேலும் இரண்டு நபர்களை அழைத்து வந்த அவர், நள்ளிரவில் செல்வதுரையின் உடலை ராணியின் வீட்டிலிருந்து கொண்டு சென்று, அரசூர் கோயில் பின்புறமாக போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். எனவே, ராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்... தற்கொலைக்கு முயன்ற செல்வதுரையை கவனக்குறைவாக கையாண்டது, காவல்துறைக்குத் தகவல் அளிக்காமல் தடையங்களை மறைக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, ராணி, அவருக்கு உதவிய பரத், ராஜ்குமார், ஆனந்தன் ஆகிய 4 பேரை திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் கைதுசெய்தனர். மேலும், 4 பேரையும் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/4-persons-including-a-young-woman-have-been-arrested-in-the-mysterious-death-of-a-youth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக