Ad

செவ்வாய், 7 மார்ச், 2023

``அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு?!" - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கற்கும் திறன் குறித்தும், பள்ளிகளின் அடிப்படை வசதி / செயல்பாடுகள் குறித்தும், ஆய்வுசெய்தார். அப்போது, அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கமும் உடனிருந்தார்.

ஆய்வுசெய்யும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அப்போது, அமைச்சர் வட்டார கல்வி அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவு, வட்டார கல்வி அலுவலர் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தது குறித்த விவரங்கள் மட்டும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பள்ளிகளிலும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வி தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறதா என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்களின் கற்கும் திறன் குறித்தும், வருகை பதிவு குறித்தும், இடைநிற்றல் என பல விவரங்களையும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் அடங்கிய நினைவுத்தூணினை நேரில் பார்வையிட்டார்.

அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழில், ``தமிழக பள்ளி கல்வித்துறை ஆனது மிகப்பெரிய துறையாகும். இந்த துறையின் அமைச்சராகிய நான் பள்ளிகளில் 77 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அரசு பள்ளிகள் வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலகம் மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளலாம். குளித்தலை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வருகை பதிவேடு மற்றும் அவர்களின் ஆய்வு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டத்தினை நானும் துறைச் சார்ந்த அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மாணவர்கள் அடிப்படை தமிழ் ஆங்கிலம் கணிதம் உள்ளிட்ட பயிற்சிகளை சரியான முறையில் கற்று, அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டுமென தமிழக முதல்வரின் கனவை நினைவாக்கும் வகையில் அதிகாரிகள் தங்களது அர்ப்பணிப்பான உழைப்பினை வழங்கி வருகின்றனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை அரசின் கண்ணும் கருத்தும் என்று தமிழகம் முதல்வர் கூறியுள்ளார்

பேட்டியளிக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நான் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு கூட்டத்தொடரிலோ, ஒவ்வொரு எம்.எல்.ஏக்கும் எனது ஆய்வறிக்கையினை அளிக்க உள்ளேன். அந்த வகையில், இதுவரை 34 தொகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ள நான், தற்போது 35 தொகுதியாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதன்முதலில் வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏக்களின் அனுமதியுடன் தான் அந்த தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அரசியல் பாகுபாடு பார்க்க கூடாத இந்த துறையில் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொண்டு, எதிர்காலத்தில் அவர்கள் திறன் மிக்கவர்களாக, அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல். அரசுப் பள்ளிகளில் உரிய வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களிடையே கூட்டங்கள் மற்றும் நாடகங்கள், கருத்தரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/education/school-education/minister-anbil-makesh-poyyamozhi-inspection-in-karur-government-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக