Ad

சனி, 20 மார்ச், 2021

ஜோலார்பேட்டை: காதல் மனைவியைப் பிரித்த பெண் வீட்டார் - அதிர்ச்சி முடிவெடுத்த இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள சந்திரபுரம் செட்டிப்பட்டறையைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவருக்கு வயது 28. கட்டட வேலைச் செய்துவந்த சக்தி முருகனுக்கு வண்ணார் வட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

ஜோலார்பேட்டை

இந்த திருமணத்தைப் பெண் வீட்டார் கடுமையாக எதிர்த்துள்ளனர். சக்தி முருகனிடமிருந்து தங்களது மகளைப் பிரித்து ஏலகிரி கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் பெற்றோர் வலுக்கட்டாயமாக தங்க வைத்துள்ளனர். தாய் மாமனுடன் அந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த சக்தி முருகன் காதல் மனைவி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த பெண்ணை சகிதியிடம் பேச விடாமல் பெண்ணின் உறவினர்கள் தடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சக்தி முருகன் காதல் அந்த வீட்டின் முன்பு நின்றபடியே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

சக்தி முருகன்

வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையறிந்த அந்த இளைஞரின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். மேலும், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/youth-commits-suicde-after-separated-from-lover

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக