Ad

சனி, 13 மார்ச், 2021

கன்னியாகுமரி: நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் - ப்ளஸ், மைனஸ் என்ன?

இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுயில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை, தேசமே உற்று நோக்குகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பதால் இருமுனைப் போட்டியாக, நேருக்கு நேர் மோதலில் குமரி தேர்தல் களம் அனல் பறக்க உள்ளது.

2019-தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டரை லட்சத்துக்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் வசந்தகுமார். கடந்த ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். வசந்தகுமாருக்காக மக்கள் வழங்கிய ஐந்து ஆண்டுகளை அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பூர்த்தி செய்யட்டும் என அப்போதே காங்கிரஸ் மாநில தலைமை கூறியிருந்தது. மேலும் வசந்தகுமார் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைமை அப்போதே கூறிவந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல் பிரசார்த்திலேயே வசந்தகுமாரின் புகழ் பற்றி பேசினார். 'ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் செயல்பட்டவர் வசந்தகுமார்' என புகழாரம் சூட்டினார் ராகுல் காந்தி. அப்போதே விஜய் வசந்துக்கு சீட் உறுதி என காங்கிரஸார் கூறிவந்தனர். அதுபோலவே விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்துக்கு இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

வசந்தகுமார்

விஜய் வசந்த் கடந்துவந்த பாதை:

37 வயதான விஜய் வசந்த் கடந்த நான்கு ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ளார். அண்மையில் அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜய் வசந்த். அதில் நான்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தந்தை வசந்தகுமார் மறைவிற்கு பிறகு முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார். மாநில நிர்வாகிகளிடமும், அகில இந்திய நிர்வாகிகளிடமும் குறுகிய காலத்தில் நட்புடன் நெருங்கிவிட்டார். தந்தையின் வழியிலேயே மக்களுக்கு உதவிசெய்யும் பழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய் வசந்த்.

சாதகம்:

தந்தை வசந்தகுமாரின் மறைவிற்கு பிறகு கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்துகொள்கிறார். துடிப்புடன் செயல்படும் இளைஞர் என்பது ப்ளஸ். அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியின் பலம் இவருக்கு சாதமாக இருக்கும். சிறுபான்மையினர் வாக்கு, வழக்கம் போல் காங்கிரஸ் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதும் ஒரு சாதக அம்சம். சீனியர்கள் சிலரை தவிர்த்து காங்கிரஸ்காரர்கள் விஜய் வசந்தை ஏற்றுக்கொண்டுவிட்டது ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது.

விஜய் வசந்த்

பாதகம்:

'கன்னியாகுமரி தொகுதிக்கு மத்திய அமைச்சர் வேண்டுமா, சாதாரண எம்.பி வேண்டுமா' என்ற கோஷத்தை இப்போதே பா.ஜ.க-வினர் எழுப்பத் தொடங்கிவிட்டனர். ஜெயித்தால் மத்திய அமைச்சர் என்ற ரீதியில் முழு வீச்சில் களம் இறங்கியிருக்கிறார் பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன்.

காங்கிரஸில் உள்ள சில சீனியர்களே விஜய் வசந்துக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது. ராகுல்காந்தி குமரி மாவட்டத்துக்கு வந்த சமயத்தில் மீனவர்களை சந்தித்து பேசாமல் சென்றதால் கடலோர மக்கள் கோபமாக உள்ளனர். மேலும் சட்டமன்றத் தேர்தலில், மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கையில் எடுத்து கடலோர பகுதியில் சிலர் போர்க்கொடி தூக்கியிருப்பது பாதகமான விஷயம் என்று கூறலாம்.

பொன்.ராதாகிருஷ்ணன் - விஜய் வசந்த் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொள்வதால் அதகளப்பட போகிறது கன்னியாகுமரி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vijay-vasanth-announced-kannyakumari-congress-candidate-plus-and-minus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக