"இருக்கிற திமுக எம்.எல்.ஏக்களில் சொந்த பணத்தை செலவழித்து தொகுதி மக்களுக்கு சேவை செய்தேன், மணல் கடத்தலுக்கு எதிராக வழக்கு போட்டேன்... இப்படி நல்ல விஷயங்களை செய்ததால்தான் எனக்கு சீட் கொடுக்கவில்லையோ..." என்று திமுக தலைமையை வெளிப்படையாகவே விமர்சித்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை பாஜகவில் இணைந்தார். ஆனால், அவரே மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று திமுகவினர் மட்டுமல்ல, பாஜகவினரும் எதிர்பார்க்கவில்லை.
அதிமுக கோட்டையான திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கடந்த 2019-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகி அனைவரையும் ஆச்சார்யப்படுத்தியவர் டாக்டர் சரவணன்.
மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரான இவர், ஆரம்பத்தில் மு.க.அழகிரி ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் பிறகு மதிமுகவில் இணைந்தார்.
மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக சில காலம் மதிமுகவில் பயணித்துவிட்டு, 2015-ல் பாஜகவில் சேர்ந்தார். அங்கும் சூழல் சரியில்லாததால் 2016-ல் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மருத்துவ அணி மாநில துணச்செயலாளாரக பொறுப்பு வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டதால்,
2017-ல் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.
அந்த தேர்தலின்போதுதான் அதிமுக வேட்பாளரின் சான்றிதழில் ஜெயலலிதா வைத்த கைரேகை சர்ச்சையானது. அதை நீதிமன்றம் வரை கொண்டு சென்று ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏகே.போஸ் மரணமடைய 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் வாயப்பளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் டாக்டர் சரவணன். இதனால் திமுகவில் மிகவும் செல்வாக்கான நபராக ஆனார்.
திருப்பரங்குன்றம் தொகுதியை ஆளும் அரசு புறக்கணித்ததால் இவர் சொந்த பணத்தை செலவு செய்து நலத்திட்டங்களை செய்தார்.
இந்த நிலையில் இவருக்கும் மதுரை மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் பி.மூர்த்திக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதால், வருகின்ற தேர்தலில் சரவணனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க கூடாதென்று கட்சி சீனியர்கள் திட்டமிட்டு செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவரைப்பற்றி கட்சித் தலைமையிடம் தவறான தகவல்களை போட்டுக் கொடுத்தார்கள் என்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம்-க்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வந்தவுடன் அதிர்ச்சியானார்.
திருப்பரங்குன்றம் இல்லாவிட்டால் சிட்டிங் எம்.எல்.ஏவான தனக்கு மதுரை மாவட்டத்தில் வேறு தொகுதி ஒதுக்குவார்கள் என்று நம்பியிருந்தார் சரவணன்.
ஆனால், திமுக வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சென்னை கிளம்பி ஸ்டாலினை சந்திக்க முயற்சித்தார். ஸ்டாலின் பார்க்க மறுத்துவிட்டார்.
அதோடு ஆத்திரமான சரவணனை ஆதரவாளர்கள் அதிமுகவில் சேர வற்புறுத்தினார்கள். அங்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதால் இணைவது சரிப்பாடது என்று முடிவெடுத்தவர் பாஜகவினரோடு பேச ஆரம்பித்தார். இவருக்குள்ள செல்வாக்கு, பணபலம் போன்றவற்றை அறிந்திருந்த பாஜக தலைமை இணைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டது
ஆனால், சரவணனோ மதுரையில் வடக்குத் தொகுதியை கொடுத்தால்தான் இணைவேன் என்று சொல்ல, மதுரை வடக்கு தொகுதிக்கு நல்ல வேட்பாளரை தேடிக்கொண்டிருந்த பாஜக தலைமை, இதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டது. அதோடுதான் முருகன் முன்னிலையில் இன்று காலை பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து அவரை வேட்பாளராகவும் பாஜக தலைமை முறையாக அறிவித்தும் விட்டது.
கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்தில் சீட் பெற்று சாதனை படைத்துள்ளார் சரவணன்.
திமுகவில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க விடாமல் தடுத்தவர் என்று சரவணன் தரப்பினரால் குற்றம் சாட்டப்படும் திமுக மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதிக்கு எதிராக வடக்குத் தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/politics/dmk-mla-saravanan-joined-bjp-gets-seat-in-4hours
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக