Ad

வெள்ளி, 20 நவம்பர், 2020

மீண்டும் மீண்டும் ஏமாற்றும் சித்தார்த்... அபியின் இந்த சிக்கல் தீரவே தீராதா? #VallamaiTharayo

பக்கத்து வீட்டு அம்மா தன் மகனையும் மகளையும் அழைக்கச் செல்கிறார். தூங்கிக்கொண்டிருக்கும் மகன் வர முடியாது என்கிறான். மகளோ குளிக்காமல் வர முடியாது என்கிறாள். இருவரின் பேச்சுகளையும் கேட்கும்போது நமக்கே ஓங்கி அறையலாம் என்று கை பரபரக்கிறது. பாவம் அந்த அம்மா... குழந்தைகள் பிஸி என்று வந்தவர்களிடம் சமாளிக்கிறார்.

Vallamai Tharayo

இரவு பெரியப்பாவும் சேதுராமனும் வழக்கம்போல வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் பிடிக்காத மகனாக இருந்தாலும், இப்படிப் பேசும் அப்பாவை சகித்துக்கொள்வது ரொம்பவே கஷ்டம். அப்போது காலிங் பெல் அடிக்க, சித்தார்த் நின்றுகொண்டிருக்கிறான்.

``உங்களை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டுப் போகத்தான் நாலு நாளைக்கு முன்னால வந்துட்டேன் மாமா. காலையில் போகலாம். ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். உடனே அபியின் பெரியப்பாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ``என் மாப்பிள்ளை என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகப் போறார். நான் பெத்ததும் இருக்கே” என்று போனில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்பாவையும் சித்தார்த்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது என்று நினைத்த சேதுராமன், கிளம்பிவிடுகிறார்.

Vallamai Tharayo

சித்தார்த்திடம் நாளை காலை ஒன்பது மணிக்கு ஹாஸ்பிட்டல் கிளம்ப வேண்டும் என்கிறாள் அபி. தான் வர முடியாது என்கிறான். நீங்கதானே சொன்னீங்க என்று சொன்னவுடன், ``சர்வைவலுக்கு ஏதாவது யோசிச்சி வச்சிருக்கீங்களா? இல்லை, பிச்சை எடுக்கப் போறீங்களா? எனக்கு வேலை இருக்கு. ஏதோ பேச்சுக்கு அவங்ககிட்ட சொன்னேன். நீதான் நான் பிஸின்னு அவங்களுக்குப் புரிய வைக்கணும். இதுகூடத் தெரியலைன்னா நீ என்ன காலேஜ் டாப்பர்? கோல்ட் மெடலிஸ்ட்? சுத்த வேஸ்ட்” என்று கத்துகிறான்.

மீண்டும் காலிங் பெல். கெளசல்யா குடும்பம் நின்றுகொண்டிருக்கிறது. எல்லோரிடமும் மொபைல் போன் இருக்கும் இந்தக் காலத்தில் ஒருவர்கூட தகவல் சொல்லிவிட்டு வருவதில்லை என்பதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியிலிருக்கும் அபி, சமாளித்து வரவேற்கிறாள். பெரியப்பா, என்ன திடீரென்று இந்தப் பக்கம் என்று கேட்க, ``இது என் தம்பி வீடு. எப்ப வேணாலும் வருவேன்” என்று கெத்தாகச் சொல்கிறார் கெளசல்யா.

Vallamai Tharayo

``சித்தார்த் சிங்கப்பூரிலிருந்து வந்துட்டான்னு தெரிஞ்சதும் பார்த்தே ஆகணும்னு கிளம்பிட்டா” என்று கெளசல்யாவின் கணவர் சொன்னவுடன் அபி அதிர்ச்சியடைகிறாள். `தகவல் சொன்னாரா' என்று கேட்க, ``எங்கிட்ட சொல்லாமல் என்ன செஞ்சிருக்கான்? உனக்கு என்ன வேணும், குழந்தைகளுக்கு என்ன வேணும்னு கேட்டு லிஸ்ட் போட்டான்” என்று சொல்லிவிட்டு சித்தார்த்தைப் பார்க்கப் போகிறார்.

அபியின் மகனை கெளசல்யாவின் மகன் தள்ளிவிட, இருவருக்கும் கொஞ்சம் புகைச்சல் வருகிறது. இனி என்ன நடக்கும்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-readers-review-for-episode-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக