Ad

செவ்வாய், 9 மே, 2023

இத்தாலியில் முதல் கார்; ஆஸ்திரேலியாவில் அசெம்பிளி லைன்! டாடா இண்டிகா உருவானது எப்படி? #Brand Story-2

1990-களிலேயே வாகன ஆர்வலர்களிடம் ரோல்ஸ் யார்ஸ் என்றால் பிரிட்டன் என்பர். ஃபெராரி என்றால் இத்தாலி என்பர். மெர்சிடஸ் பென்ஸ் என்றால் ஜெர்மனி என்பர், ஃபோர்ட் என்றால் அமெரிக்கா, ஜப்பான் என்றால் டொயோட்டா, வோல்வோ என்றால் ஸ்வீடன் என்பர். இந்தியா என்றால் சொல்லிக் கொள்ளும்படி அன்று சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனமோ காரோ இல்லை.

டாடா இண்டிகாவுடன் ரத்தன் டாடா!

1990-களின் தொடக்கத்திலேயே அம்பாசிடர், ப்ரீமியர் போன்ற ஒரு சில கார்களை வைத்தே மொத்த நாடும் ஓட்டிக்கொண்டிருந்தது. மாருதி சுஸிகிதான் 1980-களின் தொடக்கத்திலேயே இந்தியாவில் தொடங்கப்பட்டுவிட்டதே என்றாலும், அது ஒரு ஜாயிண்ட் வெஞ்சர் நிறுவனம். முழுக்க முழுக்க இந்திய நிறுவனம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

1960-களில் ஜே.ஆர்.டி டாடா, டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபோதே பயணிகள் காரைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற, அரசு நிர்வாகத்திடம் பெரிதும் போராடினர். சொல்லப் போனால், அன்றை தேதிக்கு டைம்லர் - பென்ஸ் போன்ற சில வெளிநாட்டு கார்களை வாங்கி, அப்போது வணிக அமைச்சகத்தின் செயலர் கே.பி.லால், பாதுகாப்புச் செயலர் வி.கே.கிருஷ்ண மேனன் ஆகியோர் பயன்படுத்தக் கொடுத்தனர். அவர்களும் சில பல மாதங்கள் வெளிநாட்டுக் கார்களைப் பயன்படுத்தியபின், கார் சூப்பர்... அதற்காக இந்தியாவில் பயணிகள் கார் தயாரிக்க அனுமதி கொடுக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு, 1993-ஆம் ஆண்டு, ரத்தன் டாடா, இந்தியாவிலேயே ஒரு காரைத் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்தார். அதற்கு வாகனங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பவர்களிடம் ஒத்துழைப்பு கேட்டு அழைப்பு விடுத்தார். மெல்ல இந்த செய்தி இந்திய ஊடகங்களிலும், சாமானியர்கள் மத்தியிலும் பரவத் தொடங்கியது.

புதிய காருடன் ரத்தன் டாடா

ரத்தன் டாடா பேச்சோடு நிறுத்தாமல், இந்தியர்களால் இந்தியர்களுக்காக இந்தியர்களே தயரிக்கும் கார் திட்டத்துக்கு ரூ.1,700 கோடி ரூபாய் ஒதுக்கினார். 1990-களில் டாடா மோட்டார்ஸ் அப்போது டெல்கோ என்று அழைக்கப்பட்டது. அன்றைய தேதியில் டெல்கோவில் பணியாற்றிக் கொண்டிருந்த சிறந்த பொறியாளர்களைக் கொண்டு ஒரு அணியையும் கட்டமைத்தார். இன்று பொறியியல் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் CAD (Computer Aided Design) தொழில்நுட்பத்தை, அப்போது இந்தியாவின் முதல் காரைத் தயாரிக்கும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் ரத்தன் டாடா சுமார் ரூ.120 கோடியை ஒதுக்கினார்.

“டாடாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை”, “டெல்கோவைக் கடன் சூழப்போகிறது”, “டாடாவின் காருக்கு சந்தை இல்லை” எனப் பலரும் வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை அள்ளி வீச ஆரம்பித்தார்கள்.

அந்த விமர்சனங்களை எல்லாம் ரத்தன் டாடா கண்டுகொள்ளவே இல்லை, அவர் அக்கறை எல்லாம், டாடாவின் புதிய கார் எப்படி இருக்க வேண்டும் என்கிற சிந்தனை மூளை முழுக்க நிரம்பி வழிந்தது. மாருதி ஜென் போல பார்க்க சிம்பிளாக இருக்க வேண்டும். ஆனால், காரின் உட்பகுதியில் அம்பாசிடர் போல, அதிக இடவசதி இருக்க வேண்டும், விலை மாருதி 800 அளவுக்கு கொடுக்க வேண்டும் என புதிய காரில் இடம்பெற வேண்டிய அம்சங்களை வரிசைப்படுத்தினார்.

புதிய காருடன் ரத்தன் டாடா

இதை எல்லாம் தாண்டி, காரில் ஐந்து பேர் பயணிக்கும் அளவுக்கு வசதிகளும், டிக்கியில் பொருள்களை வைக்க போதிய இடமும், கரடுமுரடான இந்திய சாலைகளைத் தாக்குபிடிக்கும் உறுதியும், வெளிநாட்டுச் சந்தைகளின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் டிசைன் இருக்க வேண்டும் என்றார். இத்தாலியில் உள்ள டுரின் நகரத்தில், ஒரு பிரபல டிசைன் சென்டரில் டெல்கோ நிறுவனத்தின் புதிய கார் டிசைனை அனுப்பி வைத்தனர்.

மற்றொரு அணி, காரின் இதயமான இன்ஜினில் மட்டும் கண்ணும்கருத்தமாக வேலை பார்த்து வந்தது. ரத்தன் டாடா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெ மோடெர் மொடர்ன் (Le Moteur Moderne) நிறுவனத்தின் உதவியையும் பயன்படுத்திக் கொண்டார். இன்ஜின் இந்தியாவில் தயாரானாலும், அதை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் பரிசோதித்தது.

கடைசியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட காரின் ஒரு புரோட்டோ டைப் டுரின், இத்தாலியில் தயாரானது. அதை அலுங்காமல் குழுங்காமல் டெல்கோவின் புனே ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டெல்கோ ஆலையில் இருந்து சற்று தொலைவில் வைத்து டெல்கோ தயாரித்த அந்த பர்பிள் நிற கார் திறக்கப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. நாமே, நம் மக்களுக்காக தயார் செய்த கார் இதோ நம் கண்முன்னே...

இப்போது கார் ரெடி. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருக்கும் முதல் காரில் 3,800 சிறிய கார் பாகங்கள், 700 சாய டைகள், 4000 ஜாயிண்ட் இணைப்புகள் தேவைப்படலாம் எனக் கணக்கிட்டு, அதை உற்பத்தி செய்துகொடுக்க 600 சப்ளையர்களையும் அடையாளம் கண்டு வைத்திருந்தனர்.

சப்ளையர்களைத் தயார்படுத்த, ரத்தன் டாடா, ஏ.ஜே.அக்னுவை பணியில் அமர்த்தினர். இவரது வேலையே, நிறுவனம் எதிர்பார்க்கும் தரத்தில் சப்யளைர்களைத் தயாரிக்க வைப்பதுதான். என்னதான் இந்தியாவிலேயே எல்லாவற்றையும் தயாரிக்க டாடா முயற்சித்தாலும் சில பொருள்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. உதாரணமாக, சீட் வசதிகளை ஜான்சன் கன்ட்ரோல்ஸ் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டன. கார் கண்ணாடிகள் ஒரு ஸ்பெயின் நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டது. ரேடியேட்டர்கள் ஒரு ஜப்பான் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டன.

அசெம்பிளி லைன்

சப்யளைர்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், டெல்கோ முன்னிருந்த மிகப்பெரிய சவால் அசெம்பிளி லைன். சமையல் செய்ய எப்படி பண்டபாத்திரங்கள் அவசியமோ, அப்படி வாகனங்களை உற்பத்தி செய்ய அசெம்பிளி லைன் மிக அவசியம்.

டெல்கோ நிறுவனத்திலேயே ஆறு ஏக்கர் புதிய அசெம்பிளி லைனுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போதுதான் டெல்கோ நிறுவனத்தில் பணியாற்றும் பலரும், ரத்தன் டாடா ஒரு பெரிய திட்டத்தில் இருக்கிறார். அவர் பெயரளவுக்கு சில நூறு கார்களைத் தயாரிக்க விரும்பவில்லை, உண்மையிலேயே சந்தையைப் புரட்டிப் போடும் அளவுக்கு அதிக கார்களை தயாரிக்க முனைகிறார் என நம்பத் தொடங்கினர். அன்றைய தேதிக்கு ரத்தன் டாடா ஒதுக்கிய நிலப்பகுதியை வைத்து நாள் ஒன்றுக்கு சில ஆயிரம் கார்கள் வரை தயாரிக்கலாம்.

டெல்கோவின் புதிய கார் திட்டத்துக்கு ரூ.1,700 கோடி ஏற்கெனவே ஒதுக்கி இருந்தார்கள் இல்லையா? அதை வைத்து ஒரு புதிய அசெம்பிளி லைனை வாங்கிவிடலாமா என டெல்கோ நிறுவனத்தில் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.

அந்த நேரம் பார்த்து, ஆஸ்திரேலியாவில் நிசான் நிறுவனம் ஒரு முழுமையான அசெம்பிளி லைனை வைத்திருப்பதாகவும், அதை பயன்படுத்த முடியாமல் விற்க விரும்புவதாகவும் ரத்தன் டாடாவுக்கு செய்தி வந்தது.

பல நூறு கோடி மதிப்பு கொண்ட அசெம்பிளி லைனை, ரத்தன் டாடா வெறும் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டார். நிசானும் வந்தவரை லாபம் என விற்றுவிட்டது. இப்போது டாடா முன்னிருந்த மிகப் பெரிய சவால் அதை எப்படி புனே நகரத்தில் உள்ள டெல்கோ ஆலைக்கு கொண்டு வருவது என்பதுதான்.

ரத்தன் டாடா

டெல்கோவில் இருந்து ஒரு அணி, அந்த அசெம்பிளி லைனை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆஸ்திரேலியாவுக்குப் போனது. அவர்களிடம் அசெம்பிளி லைன் தொடர்பான அனைத்து வரைபடங்கள், மேனுவல்கள், ஸ்ட்ரக்சுரல் டிசைன்கள் கொடுக்கப்பட்டன. நாள் கணக்கில் அதை டெல்கோ அணி படித்துப் புரிந்துகொண்டபின், அசெம்பிளி லைனைப் பிரிக்கத் தொடங்கியது.

மொத்த அசெம்பிளி லைனையும் பார்ட் பார்ட்-ஆக நம்பர் போட்டு, புனேவுக்கு பார்சல் செய்தது அந்த டீம். 14,800 டன் எடை கொண்ட அசெம்பிளை லைனை 650 கண்டெயினரில் அடைத்து 16 கப்பலில் ஏற்றினார்கள். இதில் 450 ரோபாட்டுகளும் அடக்கம். ஆறு மாத காலத்துக்குள் ஒட்டுமொத்த அசெம்பிளி லைனும் டெல்கோவின் ஆலையில் மீண்டும் இணைக்கப்பட்டு உற்பத்திப் பணிகள் தொடங்கின.

இதே அசெம்பிளி லைனில் மனிதர்கள் பல நூறு முறை குனிந்து நிமிர்வதை எல்லாம் தவிர்க்க ரோபாடுகள் பணியமர்த்தப்பட்டன. அசெம்பிளி லைன் சுமார் 500 மீட்டர் நீளம் என்பதால், அசெம்பிலி லைனில் ஒரு முனையில் இருந்து மறுமுனை சென்றுவர பிரமாதமான சைக்கிள்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

உற்பத்தி வேகம் சூடுபிடிக்க, மறுபக்கம், டெல்கோவின் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட காரை 1998-ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி, டெல்லி பிரகதி மைதானில் நடந்த கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல கார்களுக்கு அருகில் அழகிய பெண்கள் மாடல்களாக மாடர்ன் உடையில் நிறுத்தப்பட்டிருந்தனர். மெல்ல சுற்றிச் சுழன்று காண்போரை அசரடிக்கும் ரொடேடிங் பிளாட்ஃபார்மில் கார்கள் மிதப்பது போல் வைத்திருந்தனர். ஆனால், டாடாவின் காரைச் சுற்றி நின்றுகொண்டிருந்த அழகிய பெண்கள் நேர்த்தியாக சேலை உடுத்தி இருந்தனர். ஆண்கள் டர்பன் அணிந்திருந்தனர். ரத்தன் டாடாவே காரை ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தினார்.

அப்போது மத்திய அமைச்சராக முரசொலி மாறன் “Wow, This is Kohinoor on Wheels” என்று புகழ்ந்தார். This is Indica... என டாடா நிறுவனம் இந்தியர்களால், இந்தியர்களுக்காக, இந்தியர்களே உருவாக்கிய காரை அறிமுகப்படுத்தியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

முதலில் ஒரு காரை தயாரிக்க 8 நாள் ஆனது. இரண்டாவது காரைத் தயாரிக்க ஒரு நாள் கால அவகாசம் தேவைப்பட்டது. ஒரு சில வாரங்களுக்குள் 52 நொடிக்குள் ஒரு கார் இந்த அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட்டது.

மாருதி சுஸிகிக்கு போட்டியாக ஒரு காரைக் களமிறக்கிவிட்டோம். இனி காலம் கார் விற்பனையை பார்த்துக் கொள்ளும் என கைவிடவில்லை. இண்டிகாவைப் பார்த்து மக்கள் பழக்கப்பட வேண்டும், அது காரின் விற்பனைக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என நம்பினார் ரத்தன் டாடா. இதற்காக இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் டாடா இண்டிகாவை காட்சிப்படுத்தினார். சாரை சாரையாக மக்கள் இண்டிகாவைப் பார்த்து, ஓட்டி ரசித்தனர்.

ரத்தன் டாடா | 25 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா இண்டிகா

விளைவு, டாடா இண்டிகாவின் புக்கிங் 1.25 லட்சத்தைக் கடந்தது. அதுவும் முழு பேமெண்ட் கொடுத்து புக் செய்தனர். இது டாடாவின் டெல்கோ நிறுவனத்துக்கு இண்டிகா தயாரிக்க போதுமான பணத்தைக் கொடுத்தது. ஒரே மாதத்தில் டாடா இண்டிகா கார் விற்பனைச் சந்தையில் 14 சதவிகிதத்தைப் பிடித்து மாருதி சுஸிகிக்கு டஃப் ஃபைட் கொடுத்தது.

பிற்பாடு டாடா மோட்டார்ஸ் என்று இந்த நிறுவனத்தின் பெயரை இன்று இந்தியாவின் முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இதுவரை 7 பிராண்ட் பேசஞ்சர் கார்களுடன், குட்டி யானை, பிக்அப் ட்ரக்ஸ் என பல வகையான வாகனங்களை அறிமுகப்படுத்தி கலக்குகிறது.டாடா மோட்டார்ஸ் பிராண்ட் ஸ்டோரி ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் நிலைத்து நிற்கவேண்டிய சக்ஸஸ் ஸ்டோரி!

(அடுத்த பிராண்ட் ஸ்டோரி அடுத்த செவ்வாய் அன்று)



source https://www.vikatan.com/business/companies/how-tata-indica-was-formed-brand-story-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக