Ad

வெள்ளி, 5 மே, 2023

ஏர் இந்தியா விமானத்தில் மறைந்திருந்த தேள்... நடுவானில் பெண் பயணியை கடித்ததால் பரபரப்பு!

விமானத்தில் கரப்பான் பூச்சி தென்படுவது வாடிக்கையான செய்தியாகிவிட்டது. இந்நிலையில், நாக்பூரில் இருந்து மும்பை வந்த விமானத்தில் மறைந்திருந்த தேள், ஒன்று செளரப் சின்ஹா என்ற பெண் பயணியை கடித்துவிட்டது. இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேறு பயணிகளையும் அந்த தேள் கடித்துவிடுமோ என்ற அச்சம் சக பயணிகளுக்கு ஏற்பட்டது.

விமானத்தில் தேள் கடித்த பெண் பயணிக்கு முதலுதவி செய்யப்பட்டது. அதோடு மும்பை விமான நிலையத்திற்கு இது தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டு, மருத்துவ குழு தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

தேள்

மும்பையில் விமானம், தரை இறங்கியதும் டாக்டர்கள் தேள் கடித்த பெண்ணிற்கு உடனடியாக சிகிச்சையளித்தனர். சம்பந்தப்பட்ட பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விமானத்திற்குள் எப்படி தேள் வந்தது என்று தெரியவில்லை. அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் வளைகுடா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த விமானத்தில் பறவை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அந்த பறவை பைலட் அறையில் இருந்தது. விமானம் புறப்படும் முன்பே பைலட் அந்த பறவையை பார்த்துவிட்டார். உடனே பறவை வெளியில் செல்லட்டும் என்று கருதி கதவை திறந்து வைத்து விட்டு பைலட் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு வந்தார். 10 நிமிடம் கழித்து விமானம் புறப்பட்டுச்செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற சரக்கு விமானத்தில் பாம்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/crime/scorpion-hidden-in-air-india-flight-panic-after-biting-female-passenger-in-mid-air

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக