Ad

சனி, 6 மே, 2023

புதுக்கோட்டை: குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; ஒருநபர் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்!

புதுக்கோட்டை, இறையூர், வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாகியும், குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.

ஆணையம் விசாரணை

அதன்படி, ஒரு நபர் விசாரணை ஆணையம் சார்பில் வேங்கைவயல் கிராமத்தில் ஆய்வு நடைபெற்றது. கிராமத்துக்கு நேரில் சென்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன், அங்கு கட்டப்பட்ட புதிய குடிநீர்த் தொட்டியைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருடன் கலந்தாய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இந்த விசாரணையானது, ஐகோர்ட் உத்தரவின்படி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த வெள்ளனூர் போலீஸார், தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் விசாரித்திருக்கிறோம். இதேபோல், சுகாதாரத்துறை உள்ளிட்ட, வழக்கு தொடர்பாகவுள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரிடமும் முதற்கட்ட விசாரணையை நடத்தியிருக்கிறோம்.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நேரில் பார்த்ததாக எந்த சாட்சிகளும் இதுவரை இல்லை. அதே போல், குற்றம் நடந்த இடத்தில் நகரப் பகுதியைப் போன்று கண்காணிப்பு கேமரா வசதி எல்லாம் கிடையாது. செல்போன் டவர் வசதிகள் எல்லாம் இல்லை. இதனால், இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கு அறிவியல்ரீதியாகத் தடயங்களைச் சேகரிக்க, போலீஸார் முயன்று அதற்கான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு, புதிய குடிநீர்த்தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இந்த வழக்கில், நீதிமன்ற அனுமதிபெற்று ரத்த மாதிரி பரிசோதனை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்தச் சோதனைக்கு 8 பேர் ஒத்துழைக்கவில்லை. சிலர் ரிட் தாக்கல் செய்திருக்கின்றனர். இதில், நீதிமன்றம்தான், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற சம்பவத்தினை, சாமான்ய மனிதர்கள் யாரும் செய்யமாட்டார்கள். இழிவான சம்பவம் நடந்துவிட்டது, எனவே, இனி வரும் காலங்களில், இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வழிகளைச் செய்ய வேண்டும்.

விசாரணை தொடர்பாக சில அறிவுரைகளை, நீதிமன்றம் எனக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி, இங்கேயே முகாமிட்டு விசாரணையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். 2 மாதகாலத்துக்குள் விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது" என்றார்.



source https://www.vikatan.com/crime/one-man-commission-starts-its-investigation-in-vengaivayal-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக