Ad

ஞாயிறு, 7 மே, 2023

``எதிர்க்கட்சிகளை கூட சமாளித்து விடுகிறோம், ஆனால் இந்த கவர்னர்...” - குமரியில் காட்டமான துரைமுருகன்

தமிழக தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "எம்.ஜி.ஆர் என்னை அவர் பக்கம் அழைத்தார். அதற்கு நான், `கலைஞர் என் தலைவர், நீங்கள் என்னை வாழ வைத்த தெய்வம்’ என்றேன். கொள்கையில் நான் உறுதியாக இருந்ததை அவர் பாராட்டினார். சந்தர்ப்பம் சூழ்நிலை வரும். கட்சியை காட்டிக்கொடுப்பவன் உருப்படமாட்டான். கட்சியை காட்டிக் கொடுப்பவன் கட்சியிலிருந்து ஒதுங்குபவன் யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது. கலைஞரின் ஆற்றல் ஸ்டாலினிடம் உள்ளது. இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்தி காட்டும் ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு என்பதை நிரூபித்து காட்டிவிட்டார். கொம்பாதி கொம்பனும் விரல் நீட்டி குற்றம் கூற முடியாமல் ஆட்சி நடத்தி காட்டுகிறார்.

நாகர்கோவிலில் தி.மு.க பொதுக்கூட்டம்

சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பிய தீர்மானங்களை ஆளுநர் பார்த்துவிட்டு மாறுதல்கள் கூறி திருப்பி அனுப்பினாலும், அதை நாம் மீண்டும் சட்டமாக்கி அனுப்பினால், அவர் மாற்றாமல் கையெழுத்து போடவேண்டும் என இந்தியாவின் அரசியல் சட்டம் சொல்கிறது.

தமிழ்நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது என ஆளுநர் கூறுகிறார். புது நூலகத்தில் தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழி புத்தகம் இல்லை என கூறுகிறார். தலைவர் பெயரால் ஒரு நூலகம் மதுரையில் கட்டுகிறோம் அடுத்த மாதம் தான் அதை திறக்க உள்ளோம் புத்தகங்கள் அடுக்குவதற்குள்ளாக ஆளுநர் அவரசரபட்டு இந்த அரசு மீது குற்றம் சாட்டுகிறார்.

கவர்னர் அவர்களே, நீங்கள் பீகார்காரர். திராவிட மாடல் என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியாது. திராவிட மாடல் என்பது ஒரு அரசியல் கோஷம் என கூறுகிறார். கோஷம் என்பது ஒரு உணர்ச்சி இல்லையா? ஒரு பாரதம் ஒரு இந்தியா என்பது ஒரு கோஷம் இல்லையா? கவர்னர் உரை என்பது நாங்கள் எழுதி கொடுப்பது. அதில் அவர் சொல்லும் கருத்தை மாற்றி திரும்ப எழுதி கொடுப்போம். அப்படி அவர் கொடுத்ததை படிக்காமல் விடுகிறார். பல பில்கள் கவர்னர் அலுவலகத்தில் தூங்குகிறது. ஆனால், எந்த பில்லும் ராஜ்பவனில் பெண்டிங்கில் இல்லை என கவர்னர் சொல்கிறார்.

அமைச்சர் துரைமுருகன்

எதிர்க்கட்சிகளை கூட சமாளித்து விடுகிறோம். கவர்னர் எதிர்க்கட்சிகளைப்போல் அரசாங்கத்தை குறைசொல்வதால், அவருக்கு இப்படி பதில் சொல்ல வேண்டியது உள்ளது. திருப்பி அவர் பதில் சொல்லி பேசுகிறார்.

இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறதா. அல்லது தூண்டிவிட்டு உட்கார்ந்து இருக்கிறதா என்பது எங்களுக்கு தெரிந்தாக வேண்டும். இல்லைன்ன இந்த கவர்னருக்கு தைரியம் வராது. எந்த கவர்னரும் இப்படி பேசியது கிடையாது, லூசு மாதிரி. இதற்கிடையில்தான் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்.

இந்த ஆட்சியில் எதாவது ஒரு குறை என்றால் உடனே நிவர்த்தி செய்கிறோம். கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் மாவட்டம். மழையால் கோதையாறு கரைகள் உடைந்துள்ளன. அந்த கரைகளை கட்ட வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்தேன், முழு திட்ட அறிக்கை தயாரிக்கச் சொல்லியிருக்கிறார். விவசாயத்துறையை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் கேட்பேன். ஏ.வி.எம் கால்வாய் தூர்ந்துபோயுள்ளது என்றார்கள். ஏ.வி.எம் என்றால் சென்னையில் சினிமாதான் நியாபகம் வரும். அந்த ஏ.வி.எம்.அல்ல இது. ஏ.வி.எம் கால்வாய் பற்றி அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன். விரைவில் சீர் செய்யப்படும்.

பொதுக்கூட்டத்தில் பேசும் அமைச்சர் துரைமுருகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரே ரோட்டில் அதிக கற்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் போவதால் ரோடு மோசமாவதாக புகார் எழுந்தது. எனவே, சிறிய லாரிகளை விட்டுவிடுங்கள். பெரிய லாரிகளுக்கு பைன் போடும்படி அதிகாரிகளிடம் சொலியிருக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/duraimurugan-slams-governor-in-stalins-2-years-government-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக