Ad

செவ்வாய், 8 மார்ச், 2022

ஜெயலலிதாவுக்கு அப்போது என்ன ஆச்சு? - அப்போலோ மருத்துவமனையின் வாக்குமூலமும் சில ஃப்ளாஷ்பேக்குகளும்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதியோடு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அவரின் மரணம் குறித்து, பல்வேறு காலக்கட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி ஓய்ந்த நிலையில், தற்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அதற்கு முன்பாக, செப்டம்பர் 21-ம் தேதி, சென்னை, சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையைக் காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கிவைத்தார், ஜெயலலிதா. ஆர்.கே.நகரில், 3 மகளிர் பேருந்துகள் உட்பட 200 புதிய பேருந்து வசதிகளையும் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் நேரில் சென்று தொடங்கிவைத்தார். அவர் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இவைதான். அப்போதே, மிகவும் சோர்வுடனும், தடுமாற்றத்துடனும் காணப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து, செப்டம்பர் 22-ம் தேதி இரவில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது.

ஜெயலலிதா

சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு, ஆரம்பத்தில் செயற்கைச் சுவாசக் கருவியின் மூலமாகச் சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், 'ட்ரக்கியோஸ்டமி' அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடுதலாக, உடலியக்கத்துக்காக பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. ஓரளவுக்கு உடல்நிலை தேறிவந்த ஜெயலலிதாவுக்கு, டிசம்பர் 4-ம் தேதியன்று, திடீரென இதயமும் சிறுநீரகமும் பாதிப்படைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதயத் துடிப்பும் தற்காலிகமாக நின்றுபோனது. இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் (Cardiopulmonary Resuscitation-CPR) உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ கருவியுடன் ரத்தநாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன. தொடர்ச்சியாக 24 மணி நேரம் கடந்த பின்னரும் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்க முடியாமல் போக, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின. மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை. (அவர் குளிர்பானம் அருந்துவது போன்ற வீடியோ பல சர்ச்சைகளுக்குப் பிறகே வெளியானது.) அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்து வந்ததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக் குரல் கொடுத்தார்.

எடப்பாடி - பன்னீர்

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் என 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரணை நடத்தினர். கூடுதலாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

154 சாட்சிகளிடம் விசாரணையை முடித்திருந்த நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டது. அதில் மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் ஆணையத்தின் விசாரணை நடந்துவருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆணையம் தன் விசாரணையத் தொடங்கியது.

இந்த விசாரணையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரான பாபு மனோகர் வாக்குமூலமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், ``2016-ல் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கச் செல்லும் முந்தைய நாளில், மருத்துவர் சிவகுமாருடனான சந்திப்பின்போது தலைச்சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழலில் இருந்ததாக ஜெயலலிதா என்னிடத்தில் கூறினார். அதற்காகத் தினமும் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடத்தில் கூறியிருந்தேன். ஆனால், ஜெயலலிதா, தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதால் என்னால் ஓய்வெடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்" என அவர் கூறியுள்ளார்.

பன்னீர்

இன்று அப்பல்லோ மருத்துவர்கள் மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். இந்த விசாரணையில், மருத்துவர் மதன்குமாரிடத்தில் குறுக்கு விசாரணை நடத்தினர். அதில், 2016 டிசம்பர் 4-ல் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது எனவும் மதன் குமார் கூறியிருக்கிறார். மேலும் இந்த விசாரணையில் கலந்துகொள்ளாத மருத்துவர்கள் வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வரவேண்டும் என அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகாத அதிமுக ஒருங்கிணப்பாளர் பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகிய இருவரும் வரும் 21-ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளிவருமோ?... காத்திருப்போம்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-apollo-doctors-statement-about-jayalalithas-treatment-in-arumugasamy-commission

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக