Ad

வியாழன், 4 மார்ச், 2021

`ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும்; நான் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்துக்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

நம்முடைய பொது எதிரி, தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய தி.மு.க-வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

சசிகலா, தினகரன்

என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

சசிகலா அறிக்கை
சசிகலா அறிக்கை

நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்.

அன்புடன் வி.கே.சசிகலா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sasikala-says-she-will-exit-from-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக