Ad

செவ்வாய், 5 ஜூலை, 2022

``பக்ரீத் அன்று இஸ்லாமியர்கள் பசுக்களை பலியிட வேண்டாம்" - அஸ்ஸாம் எம்.பி மௌலானா பதுருதீன் அஜ்மல்

இஸ்லாமியர்களின் சிறப்புப் பண்டிகையான பக்ரீத் பண்டிகை வரும் 10-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகை அன்று உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் நபி என்பவரின் தியாகத்தைப் போற்றும்விதமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளைப் பலியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகக் கூறுகிறார்கள்.

அஸ்ஸாம் எம்.பி மௌலானா பதுருதீன் அஜ்மல்

இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணித் தலைவரும், அஸ்ஸாமின் துப்ரி தொகுதியின் மக்களவை எம்.பி-யுமான மௌலானா பதுருதீன் அஜ்மல், முஸ்லிம்கள் பசுக்களை பக்ரீத் அன்று பலியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ``இந்துக்கள் பசுக்களைத் தாயாகக் கருதுகின்றனர், சனாதன மதத்தினர் அதைப் புனிதச் சின்னமாக வணங்குகிறார்கள். எனவே, ஈத் பண்டிகையின்போது பசுக்களை பலியிட வேண்டாம் என்று இஸ்லாமியர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அஸ்ஸாம் எம்.பி மௌளானா பதுருதீன் அஜ்மல்

இந்த நடைமுறையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை பலியிடுமாறு முஸ்லிம் சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன், அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வார். இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய ஆதார பல்கலைகழகமான தாருல் உலூம் தியோபந்த், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈத் அன்று பசுக்களை பலியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நான் அதையே திரும்பச் சொல்கிறேன்: தயவு செய்து பசுக்களைப் பலியிடாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/islamic-body-urges-muslims-not-to-sacrifice-cow-on-bakrid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக