Ad

ஞாயிறு, 3 ஜூலை, 2022

சென்னையில் திரௌபதி முர்மு: அதிமுக முதல் தேமுதிக வரை... நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியங்கள்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினரிடையே தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார். அந்த வகையில் புதுச்சேரியிலிருந்து தமிழகம் வந்தவருக்கன நிகழ்வு 2.07.2022 அன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிகட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்த சூழலில் திரௌபதி முர்மு ஆதரவுக் கோரும் இந்த நிகழ்ச்சி மேடையில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் கலந்துகொள்வார்கள், இருவரும் நேரடியாக சந்தித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. ஐந்து கட்ட நிகழ்வாக நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க இ.பி.எஸ் அணி முதலில் ஆதரவளித்து மேடை ஏறினர். அடுத்து பா.ம.க, அதற்கடுத்து அதிமுக ஓ.பி.எஸ் அணி, இதனை தொடர்ந்து தே.மு.தி.க, மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளும் மேடை ஏறி ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் பா.ஜ.க நிர்வாகிகள் தஙகள் ஆதரவும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

திரௌபதி முர்மு, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி

இந்த நிகழ்வில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெங்களூரில் தேசிய செயற்குழு கூட்டத்தில் இருந்ததால், கலந்து கொள்ளவில்லை என முதலில் தகவல்கள் கிடைத்தன. அதன் பின் தங்களது கட்சியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவருக்கான நிகழ்வு ஒருங்கிணைக்கும் போது தமிழ் மாநில பா.ஜ.க தலைவர் கலந்து கொள்ளவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். பாண்டிச்சேரியிலிருந்து தமிழகம் வந்த திரௌபதி முர்மு உடனே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மொழி பெயர்ப்பாளராகவும், கூட்டணி கட்சியினரை அறிமுகம் செய்தவராகவும் இருந்தார். மத்திய அமைச்சர் முரளிதரன் ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினார். பா.ஜ.க மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்க, தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நால்வரும் கலந்து கொண்டனர்.

அதிமுக நிர்வாகிகள்

பா.ஜ.க ஏற்பாடு செய்ந்திருந்த இந்த நிகழ்வில் இ.பி.எஸ் ஆதரவான கட்சி நிர்வாகிகள் 63 பேர் கலந்து கொண்டனர். முதல் அமர்வில் மேடையேறிய இ.பி.எஸ், “இந்திய நாட்டை வல்லரசு நாடாக்கா உருவாக்க பாடுபட்டு கொண்டிருக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் திரௌபதி முர்மு அவர்களுக்கு கழகத்தின் சார்பாக ஆதரவு அளிக்கின்றோம். வாய் அளவிலும், ஏட்டளவிலும் மத ஒற்றுமை பற்றி பேசி கொண்டிருக்கிற எதிர்க்கட்சிகளின் உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை தேசிய ஜனநாக கூட்டணி வேட்பாளராக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்த போது, அதை முழு மனதோடு ஆதரித்து அவரை வெற்றி பெற வைக்க முதன்மையானவராக இருந்தவர் புரட்சி தலைவி அம்மா.

திரெளபதி முர்மு

அதே போல் 2012-ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தை சேர்ந்த மேகாலய மாநில முதல்வர், மத்திய அமைச்சர், மக்களவை சபாநாயகர் என்று பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்த சங்மா அவர்களை, மாண்புமிகு அம்மா அவர்கள், பா.ஜ.க, தெலுங்கு தேசம் கட்சி உட்பட பலர் ஆதரித்தனர். இருப்பினும் உதட்டளவில் பழங்குடியினர் நலன், சமூக நலன் பற்றி பேசும் காங்கிரஸ், தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் அவரால் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

ஏழை எளிய மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த திரௌபதி முர்மு அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவித்ததன் மூலம், ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு பின் அம்மா அவர்களின் கனவு நிறைவேறுகிறது. சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட திரௌபதி முர்மு நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார். தினந்தோறும் மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிட மாடல் என்று பேசி கொண்டிருக்கும் ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக சமூதாயத்தில் மிகவும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த நம் நாட்டின் பூர்வக்குடி இனமான பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் வேட்பாளர், இந்திய நாட்டின் உயரிய பொறுப்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாரத பிரதமர் அறிவித்துள்ள நிலையில்,

திரௌபதி முர்மு

அவரை ஸ்டாலின் ஆதரிக்காமல் திராவிட மாடல், சமூக நீதி என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால், மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து சமூக நீதி காத்த அம்மா அவர்கள் வழியில் வந்த நாங்கள் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிரும் திரௌபதி முர்மு அவர்களுக்கு அ.தி.மு.க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவளித்து வெற்றி பெற வைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று எடப்பாடி பேசிய பிறகு திரௌபதி முர்மு பேசினார்.

தமிழ் மொழியின் தொன்மை, தமிழகத்திற்கான விளையாட்டுகள், கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்களின் சிறப்புகள் பற்றி பேசியவர், திருவள்ளுவர், சுதந்திர போராட்ட வீரர்கள், பாரதியார் குறித்து பேசியதோடு, சி.ராஜகோபாலச்சாரியார், காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல்கலாம், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். பின் `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கனியன் பூங்குன்றனாரின் சொல்லை மேற்கோள்காட்டியவர், சுதந்திர போராட்டத்தில் 18-ஆம் நூற்றாண்டில் பூலித்தேவரின் செயல்பாடுகள், 1857-ல் நடந்த வேலூர் புரட்சி, 1929-ல் ஒத்துழையாமை இயக்கம் போன்று இந்திய சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கினை நினைவுக் கூர்ந்தவர், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசுகள் பற்றி பெருமைப்பட பேசினார்.

திரௌபதி முர்மு, பா.ம.க நிவாகிகள்

தமிழகத்தை சேர்ந்த செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சுந்தர் பிச்சை போன்றோர் இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார் என்பதை தெரிவித்த திரௌபதி முர்மு, தமிழகம் வரலாற்று சிறப்புமிக்க சிறந்த சுற்றுலா தலங்களை கொண்டிருக்கிறது என்றார்.

இதனையடுத்து பா.ம.க சார்பில் ஆதரவு தெரிவித்து பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ``இந்தியாவிலேயே முதன் முதல் பழங்குடி இனத்தை சார்ந்த மரியாதைக்குரிய மான்புமிகு திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த உடன் அவர்களுக்கு முதன் முதலில் ஆதரவு அளித்தது பாட்டாளி மக்கள் கட்சி. பழங்குடி இனத்தை சார்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த ஆற்றல்மிக்க வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். பாட்டளி மக்கள் கட்சியின் சமூகநீதி அடிப்படையில் எங்கள் முழு ஆதரவு அவருக்கு உண்டு” என்று தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்

அன்புமணி மேடையில் பேசி கொண்டிருக்கும் போதே அரங்கிற்குள் வந்த ஓ.பி.எஸ், பாமக-வினர் மேடையிலிருந்து கீழ் இறங்கியதும் ஓ.பி.எஸ் அணி மேடை ஏறி வாழ்த்து தெரிவித்தனர். பின் ஆங்கிலத்தில் உறையாற்றிய ஓ.பி.எஸ், ``முதல் முறை பழங்குடி பெண் உயர் பதவிக்கு வருகிறார். புரட்சி தலைவி அம்மா தன் வாழ்வை ஏழை எளிய மக்களுக்காக தியாகம் செய்து மற்ற பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருந்தார்.

திரௌபதி முர்மு, ஓ.பி.எஸ், அண்ணாமலை, எல்.முருகன்

அதே போல் முர்மு-வின் சாதனைகளும் பற்பல. அதிமுக உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று பேசிய ஓ.பி.எஸ்

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன்” என்று குறிப்பிட்டு பேசி இன்னமும் நாங்கள், அதிமுகவின் பொறுப்பில் தான் இருக்கிறோம் என்பதை தெளிவுப்படுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர்

இதனை தொடர்ந்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் டாக்டர்.கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சி ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியன் மற்றும் தேவநாதன் யாதவ், தனபால் ஆகியர் ஒன்றாக மேடையில் அமர்ந்து வாழ்த்தும் தங்களது ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ``நாங்கள் தான் சமூகநீதி கண்டுபிடித்தோம் என்று சொல்லக்கூடிய திமுக திரௌபதி முர்முக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/draupadi-murmu-in-chennai-highlights-of-the-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக