Ad

வியாழன், 14 ஜூலை, 2022

திருமணம் மீறிய உறவு; இ.எஸ்.ஐ மருந்தகத்தில்வைத்து குத்திக் கொலைசெய்யப்பட்ட இளைஞர் - என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ரதீஷ்குமார் (35). இவர் ஆரல்வாய் மொழியிலுள்ள இ.எஸ்.ஐ மருத்தகத்தில் உதவியாளராக வேலை செய்துவந்தார். இ.எஸ்.ஐ மருந்தகத்தில்வைத்து ரதீஷ்குமாரை கொலை செய்துவிட்டதாக நேற்று மதியத்துக்கு மேல் ஒரு பெண் அவசர போலீஸ் உதவி எண்ணான 100-க்கு போன் செய்து சொல்லியிருக்கிறார். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது ரதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அவர் உடல் அருகே பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். ரதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், அந்தப் பெண்ணைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஷீபா (36) என்றும், திருமணம் மீறிய உறவு காரணமாக இந்தக் கொலை நடந்ததும் தெரியவந்தது.

கொலையான ரதீஷ்குமார்

போலீஸார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ஷீபாவுக்கும், மேக்ஸன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு ஷீபாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோது கருங்கல் பகுதியிலுள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்துக்கு மருந்து வாங்கச் சென்றிருக்கிறார். அங்கு உதவியாளராகப் பணிபுரிந்த ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமாக மாறியது. நாளடைவில், ஷீபா தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு வந்தால் திருமணம் செய்வதாக ரதீஷ்குமார் கூறியிருக்கிறார். இதையடுத்து கடந்த 2019-ல் ஷீபா தன் கணவர் மேக்சனை விவாகரத்து செய்திருக்கிறார். அவர்களின் இரண்டு குழந்தைகளும் மேக்‌சனுடன் சென்றுவிட்டனர். அதன் பின்பு நாகர்கோவிலில் உள்ள விடுதியில் தங்கி ஷீபா வேலைக்கு சென்று வந்திருக்கிறார். ரதீஷ்குமார் ஷீபாவைத் திருமணம் செய்யாமல் 2021-ம் ஆண்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். இதை அறிந்த ஷீபா திருமணம் பற்றி ரதீஷ்குமாரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, திருமணம்தானே நடந்திருக்கிறது. விரைவில் அவளை விவாகரத்து செய்துவிடுவேன். அதன் பிறகு நாம் திருமணம் செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரதீஷ்குமாரின் மனைவி கர்ப்பமாகியிருக்கிறார். இதையறிந்த ஷீபா, ரதீஷ்குமாரிடம் வாக்குவாதம் செய்துவந்திருக்கிறார். இதனால் ஷீபா போன் செய்யும்போது ரதீஷ்குமார் போனை எடுக்காமல் இருந்திருக்கிறார். நேற்று முன்தினம் ரதீஷ்குமாருக்கு ஷீபா போன் செய்திருக்கிறார். போனை எடுத்துப் பேசிய ரதீஷ்குமார், `நீ இன்னும் சாகவில்லையா?' என நக்கலாகக் கேட்டிருக்கிறார். இதனால் மனமுடைந்த ஷீபா, 'நாளை எனக்குப் பிறந்தநாள், அதைக்கூட மறந்துவிட்டாயே... நான் உன்னை ஒரு முறை பார்த்துவிட்டுச் சாகிறேன்' எனக் கூறியிருக்கிறார். நாளை ஆரல்வாய்மொழியிலுள்ள இ.எஸ்.ஐ மருந்தகத்துக்கு வருமாறு ரதீஷ்குமார் கூறியிருக்கிறார்.

கொலைக்குப் பயன்படுத்திய உளி, கத்தி

நேற்று உணவு சமைத்து எடுத்துக்கொண்டு மருந்தகத்துக்குச் சென்றிருக்கிறார் ஷீபா. மேலும், அந்த உணவில் 15 தூக்க மாத்திரைகளையும் கலந்து எடுத்துச் சென்றிருக்கிறார். மருத்தகத்தில் இருந்த ரதீஷ்குமாரிடம் பேசிய ஷீபா தான் சமைத்து எடுத்துச் சென்ற உணவை அவருக்குச் சாப்பிட கொடுத்திருக்கிறார். அதைச் சாப்பிட்ட ரதீஷ்குமார் மயங்கியிருக்கிறார். அதன் பின்னர் தான் மறைத்துவைத்திருந்த உளி மற்றும் கத்தியால் ரதீஷ்குமாரின் மார்பில் சரமாரியாக குத்தியிருக்கிறார். சுமார் 30 இடங்களில் கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். அதன் பிறகே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் சொல்லியிருக்கிறார்.

திருமணம் செய்வதாகக் கூறி தன்னிடம் பணம் வாங்கியதுடன், தன் வாழ்க்கையைச் சீரழித்த ரதீஷைப் பழிவாங்கவே இந்த கொடுஞ்செயலை செய்ததாக ஷீபா கூறினார். ஷீபா வருவதாச்க சொன்னதும், ரதீஷ் இ.எஸ்.ஐ மருந்தகத்தில் பாய் ஒன்றைத் தரையில் விரித்து தயாராக இருந்திருக்கிறார். அந்த பாயில் ரதீஷ்குமாரை படுக்கவைத்து குத்திக் கொலைசெய்திருக்கிறார்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/youngster-murdered-in-esi-medicine-dispense-center-due-to-illegal-marital-affair

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக