Ad

திங்கள், 20 ஜூலை, 2020

`கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமி; விரட்டிய கிராம மக்கள்!’ -அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் பிரசாந்த், எலக்ட்ரீசியன். இந்த நபர், அதேப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை ஒருதலையாக காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை தன் காதலை வெளிப்படுத்தியும் சிறுமி ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரசாந்த் சிறுமியை மிரட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது.

Representational Image

இந்த நிலையில், நேற்று மாலை வயல் வேலைக்குச் சென்றுவிட்டு களைவெட்டியுடன் வீடு திரும்பிய சிறுமியை பிரசாந்த் வழிமறித்துக் காதலிக்க வற்புறுத்தியுள்ளார். சிறுமி திட்டியதால், அவரது கையில் இருந்த களைவெட்டியை பிடுங்கி தலையில் கொடூரமாகத் தாக்கினார். ஆத்திரம் தீராமல், மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்பு கம்பியாலும் சிறுமியின் முதுகில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த சிறுமி, ரத்தம் சொட்ட சொட்டச் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்தனர்.

Also Read: சென்னை: இ-பாஸ் கிடைக்காமல் தவித்த மனைவி, மகள்! - தனிமையால் தற்கொலை முடிவெடுத்த முதியவர்

அங்கிருந்து ஓட்டம் பிடித்த பிரசாந்த், அங்குள்ள மின்கம்பத்தில் கடகடவென ஏறி மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக மின் ஊழியர்களை வரவழைத்து மின் இணைப்பைத் துண்டித்தனர்.

Representational Image

தகவலறிந்ததும், கீழ்பென்னாத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியை மீட்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், `எத்தனை நாள்களாகச் சிறுமிக்கு அந்த இளைஞர் காதல் தொல்லை கொடுத்துவந்தார். விபரீத முடிவுக்கு முன்னர் என்ன நடந்தது?’ என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/tiruvannamalai-youth-committed-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக