Ad

திங்கள், 20 ஜூலை, 2020

கேரளா: `பினராயி விஜயன் மீது நடவடிக்கை!’ - யெச்சூரிக்குக் கடிதம் எழுதிய ரமேஷ் சென்னிதலா

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கு கேரளத்தில் அரசியல் ரீதியாகப் புயலைக் கிளப்பியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராகவும் ஐ.டி செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியவர்களுக்கு உதவியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், கேரள அரசின் ஐ.டி துறையில் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அருண் பாலச்சந்திரன் ஆகியோரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளதால் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கில் சிக்கியுள்ள சந்தீப் நாயரின் ஒர்க்‌ஷாப் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா போராட்டம் நடத்துவதாகக் கூறியிருந்தார். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், போராட்டத்தை மாற்றிவைப்பதாக அறிவித்தார். அதே சமயம் வரும் 27-ம் தேதி கூடும் கேரள சட்டசபைக் கூட்டத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமும், சபாநாயகரை நீக்க வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளார் ரமேஷ் சென்னிதலா.

சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

அதுமட்டுமல்லாது முதல்வர் பினராயி விஜயன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்தியக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். ரமேஷ் சென்னிதலா எழுதியுள்ள கடிதத்தில்,``சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினரான பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் அரசு ஊழல், குற்ற நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது. சி.பி.எம் கட்சியின் கொள்கை, நடைமுறை கோட்பாடுகளில் இருந்து தடம்மாறி பினராயி அரசு தவறு செய்கிறது.

Also Read: கேரளா: `என் அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தால் வரட்டும்!’ - பினராயி விஜயன் காட்டம்

கேரளத்தை உலுக்கிய தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாகச் சான்றுகள் வெளியே வந்துள்ளன. முதல்வர் பினராயி விஜயனின் செயலாளராக இருந்த சிவசங்கரன், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயப்படுத்தியுள்ளதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.டி துறையில் முறைகேடாகப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அரசின் எல்லாத் துறைகளும் முதல்வரின் கீழ்தான் வரும். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் பினராயி விஜயன் கூறுவது அபத்தமான பதிலாகும். எனவே, கட்சி கொள்கையில் இருந்து விலகிய பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பினராயி விஜயன்

இந்தநிலையில் சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``தங்கம் கடத்தல் விவகாரத்தில் கட்சிக்கும் அரசுக்கும் இரட்டை நிலைப்பாடு இல்லை. இந்த விவகாரத்தால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. கேரள அரசின் செயல்பாடுகளில் கட்சி தலையிடாது. கட்சி நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற ரமேஷ் சென்னிதலாவின் கடிதம் கிடைத்தது. அதைப் பரிசோதித்த பிறகு, பதில் அளிக்கிறேன். தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/chennithala-writes-to-yechuri-seeks-to-take-action-against-pinarayi-vijayan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக