Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2020

மகாராஷ்டிரா:`பட்னாவிஸ் சிறந்த முறையில் செயல்படுகிறார்!’ - சிவசேனா `திடீர்’ பாசம்

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 11,500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இந்த நிலையில், அரசின் நடவடிக்கைகளை அம்மாநில எதிர்கட்சித் தலைவர் பாராட்டியதை அடுத்து ஆளும் கட்சியும் எதிர்கட்சித் தலைவரைப் பாராட்டியுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மாநில அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும் சுகாதார வசதிகளைக் கண்காணிக்க எதிர்கட்சித் தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததாகவும் அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக தனது திருப்தியை அவர் வெளிப்படுத்தியதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது. இந்த விஷயம், அரசாங்கம் மற்றும் கொரோனா நோயாளிகள் இடையே மன உறுதியை அளிக்கும் விதமாக உள்ளது எனவும் ஆளும் கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.

Also Read: `நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் கொரோனா பரவலுக்குக் காரணம்!’ - கொதிக்கும் சிவசேனா

உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி புரியும் சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னா வெளியிட்டுள்ள கட்டுரையில், ``எதிர்கட்சித் தலைவராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், மாநில முதல்வராக இருந்ததைப் போலவே இளமையும் ஆற்றலும் உடையவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது நெருங்கிய கட்சி ஊழியர் ஒருவரிடம் சொன்ன செய்தி ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. `ஒருவேளை நான் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தால், என்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளார். இப்படி சொன்னதற்காக பட்னாவிஸ்ஸை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். மாறாக, அவரைப் பலரும் கேலி செய்கிறார்கள். இப்படி செய்வது சரியானது அல்ல. மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவராக பட்னாவிஸ் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார் என்பதை நாங்கள் மீண்டும் கூறுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே

தொடர்ந்து அந்த கட்டுரையில், ``அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் கூறியதை ஸ்டண்ட் ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது. தனக்கு பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அரசின் சுகாதார நடவடிக்கைகள், அவரைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்துள்ளார். அவர் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை மாநில அரசுக்கும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கும் மன உறுதியை அளிக்கும் விதமாக அமையும். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா:`மகாபாரதப் போரைவிட கடினமாக உள்ளது!’ - மோடியை சீண்டும் சிவசேனா



source https://www.vikatan.com/government-and-politics/politics/opposition-party-leader-fadnavis-doing-great-job-says-shivsena

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக