'கொரோனா உலகநாடு முழுதும் பல்வேறு ஆபத்துக்களை அள்ளி வீசுகிறது. ஒரு பக்கம் நோய்த் தொற்று குறையக் குறைய மறுபக்கம் அதிகரிக்கிறது. எப்பதான் இந்த நோய் தீருமோ என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கவே செய்கிறது. கொரோனா பல தீமைகளைத் தீட்டினாலும் அதன் சிதறல்களில் சில நன்மையை அரங்கேறியே இருக்கிறது. இந்த கஷ்டகாலத்தில் பல நல்ல முகங்கள் வெளியே தென்பட்டு பாரட்டுக்களைப் பெற்றுவருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் தீவிரமாகக் கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் 'பசுமை நண்பர்கள்' தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா, உதவி தேவைப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்கள், அதிகளவு கால்நடை வளர்ப்பவர்களுக்கு வைகோல்கள், அழகர்கோயில் குரங்களுக்கு பழங்கள், ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளித்தல், வீதியில் கிடக்கும் ஆதவற்வர்களுக்கு உணவு வழங்குதல் என்று ஆக்கபூர்வான உதவிகளை உணர்வுபூர்வமாகச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அமைப்பு சார்பாகப் பசுமையை வலியுறுத்தி மரங்கள் நட வேண்டும் என்றும். கொரோனா கட்டுப்பாட்டுக்கு முகக் கவசம் அணிந்து சமூகத்துக்கு உதவ வேண்டும், என முகக்கவசத்தின் மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். சாலையில் செல்லும் நபர்களை மறித்து 7 வண்ணங்களில் தொகுப்பு மாஸ்க்கை வழங்கிக்கொண்டிருந்த பசுமை நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் அலங்கை பொன்.குமாரிடம் பேசினோம்,
``பாரம்பர்யத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் பசுமை நண்பர்களின் நோக்கம். இதற்காக அனைத்து வயதினரும் பசுமை நண்பர்கள் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எந்த ஒரு பாகுபாடும் இல்லாது இயங்கும் பசுமை நண்பர்கள், கொரோனா காலகட்டத்தில் மனதளவில் கைகோத்து பணி செய்கிறோம்.
கடந்த மூன்று வருடங்களாக ஏப்ரல் முதல் நாள் 'ஏப்ரல் கூல்' என்ற பெயரில் மரங்கள் நடுவது குறித்து விழிப்புணர்வு செய்து ஏராளமான மரங்கன்றுகள் நட்டு ஏப்ரல்-1 ஃபூல் இல்லை, ஏப்ரல் கூல் என்று மாற்றி பிரமாண்ட நிகழ்வை ஏற்படுத்துவோம். இந்தாண்டு கொரோனா காலத்தால் அவ்வாறான நிகழ்வை செய்ய முடியவில்லை. அதனால் மருத்துவப் பணிக்கு ஈடாக உயிரை காப்பாற்றும் பணியை செய்துவரும் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பெருமைபடுத்தும் விதமாக அவர்கள் கையால் ஆக்ஸிஜன் சக்தியை அதிகமாக வெளியிடும் வேப்பு மரக்கன்றுகளை நடவைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களுக்குத் தேவையான கவச உடைகளை வழங்கினோம்.
தொடர்ந்து மிகவும் உணவுக்கு கஷ்டப்படும் குடும்பங்களைத் தேடித் தேடி நிவாரண பொருள்களை வழங்கினோம். ஏன் விகடன் செய்தியில் வெளியான மேலூர் பாட்டியின் நிலையைக் கருதி பல கி.மீ பயணித்து உதவி செய்தோம். தொடர்ந்து உணவுப் பொட்டலங்கள் மற்றும் கால்நடைகள், வனவிலங்குகள் என எல்லா தரப்பு தேவையை உணர்ந்து உறுதிப்படுத்தி உதவி செய்தோம்.
இந்நிலையில் தொடர்ந்து முகக் கவசங்களை, மரக் கன்றுகளையும் வழங்கி வருகிறோம். தற்போது 5 ,000 முகக் கவசங்கள் கிட்ட நெருங்கிவிட்டது. தொடர்ந்து 10,000-மும் தாண்டலாம். ஒவ்வொரு ஆயிரம் எண்ணைக்கையின்போது மரம் வளர்ப்பு விழிப்புணர்வுகளையும், கொரோனாவுக்கு முகக்கவசம் அணிவது குறித்து புதுமையான யுக்திக்களைக் கையாண்டு மக்களுக்கு கருத்தைக் கொண்டு சேர்க்கிறோம்.
தற்போது 7 வண்ணங்கள் நிறைந்த மாஸ்கை ஒரே பாக்கெட்டில் அடைத்துக் கொடுக்கிறோம். அதனால் அவர்கள் தினமும் ஒரு மாஸ்க் பயன்படுத்திக் கொள்கின்றனர். மாஸ்க் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் ஆர்டர் செய்து சில நாள்கள் காத்திருந்து பெற்று மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம். களப்பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவ ஊழியர்கள், பால் வியாபாரிகள், செய்தியாளர்கள், சுகாதாரத்துறையினர், பொதும்மகள் எனப் பலரையும் தேடித் தேடி மாஸ்க் கொடுக்கிறோம். மாஸ்கில் மரத்தின் படம் பொறித்துக் கொடுப்பது பேரானந்தம்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/in-madurai-pasumai-friends-help-in-creating-corona-awareness
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக