Ad

புதன், 15 ஜூலை, 2020

`கொரோனா கால்சென்டர்; இறுதிச் சடங்குக்கு ரூ.15,000' - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,019 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-க்கு அதிகமாகவும் உள்ளன. இதற்கிடையில் அங்கு, கொரோவால் இறந்தவர்களின் உடல்களைப் பணியாளர்கள் மிக மோசமாக நடத்துவதாகவும், மண் அள்ளும் இயந்திரத்தில் எடுத்துச் சென்று புதைக்கிறார்கள் எனவும் தெலுங்கு தேசம் கட்சி விமர்சித்திருந்தது.

கொரோனா பரிசோதனை

இந்நிலையில், நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ``கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதையும் மீறி தொடர் புகார்கள் வந்தால் அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

Also Read: ஆந்திரா அதிர்ச்சி: மருத்துவமனைக்குள்ளேயே இறந்துகிடந்த நபர்! -தேடி அலைந்த மனைவி

அதேபோல், ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்குக்காக ரூ.15,000 மிக விரைவில் வழங்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. மேலும், தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் சுகாதாரமான சூழல், தரமான உணவுகள், மருந்துகள், சிகிச்சைகள் கிடைக்கத் தகுந்த ஏற்பாடு செய்யப்படும். கொரோனாவுக்கு தனியாக ஒரு கால்சென்டர் உருவாக்கி, அதில் தனிமை முகாம்கள், சிறப்பு முகாம்களில் இருக்கும் நோயாளிகளின் குறைகள் மற்றும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அவை உடனடியாக நிறைவேற்றப்படும். எத்தனை குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன என்பது மக்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படும்.

ஜெகன் மோகன் ரெட்டி

கொரோனா தொடர்பாக மாநிலத்தின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வைரஸ் தீவிரமடைந்த பிறகு, சிகிச்சை அளிப்பதால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, கொரோனா அறிகுறி உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு உரிய முறையில் சோதனை செய்யப்படும். ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மட்டும் 17,000 மருத்துவர்கள், 12,000 செவிலியர்கள் பணியில் உள்ளனர். வரும் காலத்தில் செவிலியர்கள் தேவை அதிகரித்தால் மேலும் பலர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்’ என ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/india/ap-govt-to-give-rs-15000-for-covid-19-victims-last-rites

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக