Ad

ஞாயிறு, 26 ஜூலை, 2020

ஆந்திரா: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளி! - மகள்களைப் பூட்டி நிலத்தை உழுத துயரம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மகாரஜுபள்ளி பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் 50 வயதான வீரதல்லு நாகேஷ்வர் ராவ். இவர் 17 வருடங்களுக்கு முன்பு மதனபள்ளி நகருக்கு பிழைப்புத் தேடி தன் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அங்கு சொந்தமாக டீக்கடை வைத்து நடத்திவந்த நாகேஷ்வர் ராவ், நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் சம்பாதித்து வந்துள்ளார்.

ஆந்திரா

இந்தநிலையில்தான் நாடு முழுவதும் கொரோனாவுக்கான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இவரின் டீக்கடை திறக்கவே முடியாமல் போயுள்ளது. அந்த நேரத்தில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து நாள்களைக் கழித்து வந்துள்ளது நாகேஷ்வர் ராவின் குடும்பம். ஒரு கட்டத்தில் அந்த மொத்த சேமிப்பு பணமும் காலியானதால் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழி இல்லாமல் தவித்து வந்துள்ளனர். அதனால் மதனபள்ளியை விடுத்து தன் சொந்த ஊரான மகாராஜுபள்ளிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

Also Read: `லுங்கி, பட்டுப்புடவை, தீப்பெட்டிகள் தேக்கம்!’ -வாழ்வாதாரம் இழந்த குடியாத்தம் தொழிலாளர்கள் #corona

இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஆந்திராவில் நல்ல மழை பெய்து வந்ததால் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிர் விளைவித்து விவசாயம் செய்ய நினைத்துள்ளார் நாகேஷ்வர் ராவ். தன் நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்ய உத்தேசித்துள்ளார். ஆனால், அவரிடம் நிலத்தை உழும் டிராக்டர் அல்லது எருது எதுவுமே இல்லாமல் இருந்துள்ளது. அதனால் விவசாயம் செய்யும் முயற்சியைக் கைவிட்டுள்ளார் நாகேஷ்வர், இந்தத் தகவலை அறிந்த அவர் இரண்டு மகள்களும் தங்களை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழும்படி தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர். 17 மற்றும் 15 வயதுடைய நாகேஷ்வரின் இரு மகள்களும் ஏர் உழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிலம் உழும் பெண்கள்

“ஊரடங்கினால் நான் என் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்டேன். அதனால் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். அதற்காக எருது வாடகைக்குக் கேட்டபோது நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் கேட்டனர். அதேபோல் டிராக்டருக்கு 1,500 ரூபாய் கேட்டனர். அவ்வளவு தொகை என்னிடம் இல்லாததால் நான் விவசாயம் செய்ய நினைத்ததை விட்டுவிட்டேன். பின்னர் என் மனைவியும் மகளுக்கும் எனக்கு உதவுவதற்காக வந்தனர்” என நாகேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.

Also Read: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த ஆந்திரக் கூலித் தொழிலாளர்கள்! - களத்தில் இறங்கிய விகடன்



source https://www.vikatan.com/news/india/andhra-farmer-uses-daughters-to-pull-plough

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக