Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

சென்னை: `டுடே ஈஸ் மை லாஸ்ட் டே..! - வாட்ஸ்அப்பில் அதிர்ச்சி கொடுத்த தலைமைக் காவலர்

சென்னை பெரம்பூர் செம்பியம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜோசப் (37) இவர், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப் பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜெகதீஸ்வரி (34) என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

தற்கொலை

தலைமைக் காவலர் ஜோசப், கடந்த 22.5.2020-ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜோசப்புக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனைவி ஜெகதீஸ்வரி கோபித்துக்கொண்டு ஓட்டேரியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஜோசப் 17-ம் தேதி விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து அவரின் அண்ணன் ஜான்சனுக்கு தகவல் தெரிந்ததும் அவர் ஜோசப் வீட்டுக்குச் சென்றார்.

உடனடியாக ஜோசப்பை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, ஜோசப்பை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோசப் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் தனது வாட்ஸ்அப்பில் ‘‘டுடே ஈஸ் மை லாஸ்ட் டே’’ என ஸ்டேட்டஸ் வைத்திருந்துள்ளார்.

Also Read: சென்னை: இ-பாஸ் கிடைக்காமல் தவித்த மனைவி, மகள்! - தனிமையால் தற்கொலை முடிவெடுத்த முதியவர்

வாட்ஸ்அப்

இதுகுறித்து செம்பியம் போலீஸார் கூறுகையில், ``கடந்த 1.12.2003-ம் ஆண்டு ஜோசப் தமிழக காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 27.3.2019-ம் தேதி முதல் பணியாற்றி வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜோசப், விஷம் குடித்துள்ளார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். தலைமைக் காவலர் ஜோசப்பின் செல்போனை ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/chennai-police-head-constable-commits-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக