சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலை அடுத்த முக்கூரணியில் ராணுவ வீரரின் வீட்டில் மர்ம நபர்கள் நகையைக் கொள்ளையடித்தனர். அப்போது, வீட்டில் இருந்த ராணுவ வீரரின் மனைவி, தாய் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கடந்த 14-ம் தேதி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொலைச் சம்பவத்தில் போலீஸார், 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த மருதிப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் விமானப்படை வீரர் நாகசுந்தரம். அவர் மனைவி விஜயலட்சுமி, மகன் வெங்கடேஸ்வரன் மருமகள் மற்றும் பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சுமார் இரவு 9 மணியளவில் வீட்டின் பின்புறம் வழியாக 7 முகமூடிக் கொள்ளையர்கள் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதில், கொள்ளையர்கள் 20 பவுன் நகை மற்றும் 85,000 ரொக்கப் பணம் மற்றும் செல்போன்கள் போன்றவற்றைக் கொள்ளையடித்தனர்.
Also Read: சிவகங்கை: ராணுவ வீரர் வீட்டில் இரட்டைக் கொலை! - பணம், நகை கொள்ளை
அப்போது நாகசுந்தரத்தின் மகன் வெங்கடேசன் கொள்ளையர்களைத் தடுக்க முயன்றிருக்கிறார். அப்போது, கொள்ளையர்கள் கையிலிருந்த கத்தியால் கை, தலையில் காயப்படுத்திவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். மேலும், வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஹார்டிஸ்க் உள்ளிட்ட பொருள்களை உடைத்து கைப்பற்றிக் கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகங்கை எஸ்.பி ரோஹித்நாதன், திருப்பத்தூர் டி.எஸ்.பி அண்ணாதுரை சம்பவ நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/sivaganga-robbery-in-former-air-force-soliders-house
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக