Ad

சனி, 18 ஜூலை, 2020

கும்பகோணம்: 7 மணிநேர ஸ்விட்ச் ஆஃப்; 4 மாத தேடுதல்! - கொலை வழக்கில் சிக்கிய 5 இளைஞர்கள்

கும்பகோணத்தில் நகை, பணத்தை கொள்ளையடிப்பதற்காக எண்ணெய் வியாபாரி ஒருவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மனைவியின் கண்முன்னே அவரைக் கொலை செய்தனர். இந்த வழக்கில் கல்லூரி மாணவர் உட்பட 5 இளைஞர்களை 4 மாதங்களுக்குப் பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தங்கபாண்டியன்

கும்பகோணம் மேலக்காவிரி பகுதியில் வசித்து வந்தவர் ராமநாதன் (65) எண்ணெய் வியாபாரி. இவரின் மனைவி விஜயா (58). கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி இரவு 8 மணியளவில் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனியே டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டுமெனக் கூறி அவர் வீட்டுக்குள் முதலில் 2 பேரும் அதன் பிறகு, மூன்று பேரும் உள்ளே நுழைந்தனர்.

பின்னர் விஜயாவை மற்றொரு அறைக்குள் தள்ளிவிட்டு கதவை சாத்தினர். பிறகு ராமநாதனிடம், `வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்துக் கொடு' என மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, `உன் மனைவியைக் கொலை செய்துவிடுவோம்' என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன ராமநாதன், `அவளை ஒன்றும் செய்துவிடாதீர்கள்' எனக் கெஞ்சிவிட்டு நகை, பணத்தைக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு விஜயாவை பூட்டப்பட்ட அறையிலிருந்து விடுவித்தனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

அத்துடன் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்புக் கம்பியை எடுத்து, `உன்னை உயிரோடு விட்டால் எங்களை போலீஸில் மாட்டிவிடுவாய்' எனக் கூறி ராமநாதன் கழுத்தில் குத்தியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ந்த அவர் மனைவி விஜயா, `என் கணவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள்' எனக் காலில் விழுந்து கொஞ்சி கதறியுள்ளார். இதைக் கேட்காத அந்தக் கொள்ளையர்கள் ராமநாதனைக் கொலை செய்துவிட்டுத் தப்பித்துச் சென்றனர்.

Also Read: கும்பகோணம்: `100-க்கு வந்த அழைப்பு!’ - எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

இதுகுறித்து கிழக்கு போலீஸார் வழக்கு பதிந்ததுடன் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். ஆனால், கொலையாளிகள் குறித்து எந்தத் தடயமும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இதனால் கொலை நடந்து 4 மாதங்களாகியும் கொலையாளிகளைப் பிடிக்க முடியவில்லை.

ராஜன்

இந்நிலையில் பழைய பாலக்கரையில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துடமான முறையில் வந்த கும்பகோணம் ஆழ்வான்கோவில் தெரு தங்கபாண்டியன் (40), இவரின் நண்பர்கள் அசூர் ரோடு சித்தி விநாயகர் நகர் வினோத் (30), மேட்டுத்தெரு ஹரிஹரன் (22), தஞ்சை மாதாக்கோட்டை ராஜன் (29), பாலாஜி (25) ஆகிய 5 பேரை பிடித்துடன் அவர்களிடமிருந்து 5 கத்திகள், 3 செல்போன்கள், நாலரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

மேலும் 5 பேரிடமும் நடத்திய விசாரணையில் எண்ணெய் வியாபாரி ராமநாதனைக் கொலை செய்ததும் தெரிய வந்ததுடன் கொலைக்காக இவர்கள் தீட்டிய திட்டத்தையும் கேட்டு போலீஸாரே அதிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``தங்கபாண்டியன் காய்கறி லோடு ஏற்றும் வேலை செய்து வந்துள்ளார். அத்துடன் கும்பகோணத்திலிருந்து தஞ்சைக்கு குடிபெயர்ந்தவர். வினோத், ஹரிஹரன், ராஜன் (29), பாலாஜி (25) ஆகிய நான்கு பேரும் இவருடைய நண்பர்கள்.

பாலாஜி

செலவுக்குப் பணம் இல்லாததால் தங்கபாண்டியன் தலைமையில் இவர்கள் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியதுடன் தங்கபாண்டியனே, எனக்கு எண்ணெய் வியாபாரி ஒருவரை தெரியும். அவர் தினமும் கடையிலிருந்து நிறைய பணம் எடுத்துச் செல்வார் எனக் கூறியுள்ளார். சாலையில் செல்லும்போது இதைச் செய்தால் நாம் மாட்டிக்கொள்வோம், எனவே வீடு புகுந்து கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்கின்றனர்.

அதன்படியே ஒரு முறை சென்றபோது திட்டம் பெயிலியர் ஆகிவிடுகிறது. மீண்டும் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி இரவு செல்கின்றனர். இதில் ராஜன் செல்போன் கம்பெனி ஒன்றில் டவர் செக் செய்யும் வேலை செய்து வந்ததால் அதைப் பற்றிய விபரங்களை அத்துப்படியாகத் தெரிந்து வைத்துள்ளார். எனவே, செல்போன்களை நாம் ஆன் செய்து வைத்திருந்தால் நம்மை போலீஸ் எளிதாகப் பிடித்துவிடுவார்கள் என்று கொலை செய்வதற்கு 7 மணி நேரத்துக்கு முன்பாகவே தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டனர்.

ஹரிஹரன்

அதன்பிறகு அந்தப் பகுதிக்குச் சென்று கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். நாங்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்போன் டவரின் மூலம் அதில் வந்துள்ள அழைப்புகளை வைத்தே விசாரிப்போம். செல்போனை ஆஃப் செய்துவிட்டதால் இவர்களை நெருங்க முடியவில்லை. அத்துடன் தங்கபாண்டியன் பழைய சிம்கார்டை உடைத்துவிட்டு புதிய சிம்கார்டை மாற்றிவிட்டார்.

5 பேரும் ஒரே நேரத்தில் ஏன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கினோம் அத்துடன் வினோத் என்பவரை கண்காணிக்கத் தொடங்கினோம். இதில் தங்கபாண்டியன் 15 வருடங்களுக்கு முன்பு குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பதும், ஹரிஹரன் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. எங்களின் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/5-persons-were-arrested-in-murder-charge-at-kumbakonam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக