Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `3 நாள்கள் அனுமதி’ - 5 காவலர்களைத் தூத்துக்குடி அழைத்துச் செல்லும் சி.பி.ஐ?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. முன்னதாக விசாரணை செய்த தமிழக சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உட்பட 10 பேரைக் கைது செய்தது. தொடர்ந்து, விசாரணையைக் கையில் எடுத்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ விசாரணைக் குழு, சந்தேக மரணம் எனப் பதிவு செய்யப்பட்ட வழக்கினை 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது.

நேற்று மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சி.பி.ஐ அதிகாரிகள்

Also Read: சாத்தான்குளம்: `5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல்!’ - நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

சி.பி.ஐ விசாரணை:

கடந்த மூன்று நாள்களாகத் தூத்துக்குடியில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்துவந்தனர். இதற்கிடையில், நேற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் முன் ஜாமின் மனுத்தாக்கல் செய்தனர். அதை அறிந்த சி.பி.ஐ அதிகாரிகள், அவசர அவசரமாக மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில், ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட சாத்தான்குளம் போலீஸார்

இந்நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது முன் ஜாமின் மனுவை நேற்று மாலையே வாபஸ் பெற்றார் ஆய்வாளர் ஸ்ரீதர். இதற்கிடையில், சி.பி.ஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று காலை விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹேமானந்தகுமார் விசாரித்தார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐவரும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். ஐந்து பேரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ய முடிவெடுத்திருப்பதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்குச் செல்ல சம்மதமா என ஆஜர் செய்யப்பட்ட ஐவரிடமும் தனித்தனியாகக் கேட்டிருக்கிறார் நீதிபதி. அதற்கு ஐவரும் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சி.பி.ஐ தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐவரும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்குச் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர். அதை அடுத்து மூன்று நாள்கள் சி.பி.ஐ விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

ஐவரையும், தூத்துக்குடி அழைத்துச் சென்று விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: சாத்தான்குளம்: `7 மணி நேரம்; உணவுக்குக்கூட வெளியே செல்லவில்லை' -சிபிஐ விசாரணையின் முதல் நாள்



source https://www.vikatan.com/news/judiciary/cbi-was-allowed-to-investigate-sathankulam-police-for-3-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக